ஈரானால் இதற்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாது என்பதால், தேர்தலுக்குப் பிறகு உடனடியாக போர் முடிவுக்கு வரும் எனத் தாம் கருதுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். டெக்சாஸ் செல்வதற்கு முன்னதாக ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், போர் முடிவடையும் வரை சர்வதேச சந்தையில் எண்ணெய் விலைகள் குறைய வாய்ப்பில்லை என்றும் குறிப்பிட்டார்.
பெப்ரவரி மாதம் போர் தொடங்கியதிலிருந்து, இந்த மோதல் எப்போது முடிவுக்கு வரும் என்பது குறித்து ட்ரம்ப் பல்வேறு காலக்கெடுவை முன்னதாக அறிவித்திருந்தார். எனினும், போர் தொடர்ந்தும் நீடித்து வருவதால் அவர் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஈரானுடனான போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரக் கோரி சொந்த குடியரசுக் கட்சிக்குள்ளிருந்தே ட்ரம்பிற்கு அழுத்தம் அதிகரித்து வருவதுடன், அவருக்கான கருத்துக் கணிப்பு ஆதரவு நிலையும் சரிவடைந்து வருகின்றது.
மத்திய கிழக்கில் தீவிரமடைந்துள்ள மோதல்கள் காரணமாக, கச்சா எண்ணெய் விலை நேற்றைய தினம் மீண்டும் 100 அமெரிக்க டொலரைக் கடந்து விற்பனையாகின்றது. இது கடந்த ஜூலை மாதத்திற்குப் பின்னர் பதிவான பாரிய உயர்வாகப் பார்க்கப்படுகின்றது. இவ்வாறான சர்ச்சை மற்றும் அழுத்தங்களுக்கு மத்தியில், அமெரிக்க நேரப்படி இன்றைய தினம் குடியரசுக் கட்சி மாநாட்டில் டொனால்ட் ட்ரம்ப் சிறப்புரையாற்றவுள்ளார்.