பான் இந்திய அளவிலான நட்சத்திர நடிகரான ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘பத்தா’ திரைப்படத்தில் இடம் பெற்ற ‘மகளே’ எனும் முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பத்தா’ திரைப்படத்தில் விஜய் சேதுபதி லிஜோ மோல் ஜோஸ் ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கிறார்கள். எஸ். கே. செல்வகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார்.
தந்தை, மகள் இடையேயான பாசத்தை உணர்வு பூர்வமாக விவரிக்கும் இந்த திரைப்படத்தை ஸ்டார் ஸ்டுடியோ 18 நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் முராத் கெரானி, பிரியா அட்லி, அலோக் ஜெயின், அஜீத் ஆந்த்ரே ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை இயக்குநர் அட்லி வழங்குகிறார்.
எதிர்வரும் ஓக்டோபர் மாதம் முதல் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற ‘செல்லமே மகளே சந்தன அகலே சொந்தமே உயிரே தேன்மொழியே மன்னவன் மகளே மந்திர சிமிழே மங்கல விளக்கே கேளடி..’ எனத் தொடங்கும் முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலை பாடலாசிரியர் கார்த்திக் நேதா எழுத, பின்னணி பாடகர் சாய் அபயங்கர் மற்றும் பின்னணி பாடகி ஹரிணி ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள்.
இந்தப் பாடலை கடந்த தசாப்தத்தில் பாடல் ஒலிப்பதிவு முறையில் காட்சிப்படுத்தி இருப்பதும் மெல்லிசையாக பாடல் உருவாகி இருப்பதும் பாடல் வரிகள் எளிமையாகவும் ,தெளிவாகவும் இருப்பதால் அனைத்து தரப்பு இசை ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது.
இதன் காரணமாக இந்தப் பாடல் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் இரண்டு மில்லியனுக்கும் மேற்பட்ட டிஜிட்டல் பார்வைகளைப் பெற்று சாதனை படைத்து வருகிறது.