இலங்கை அரசாங்கம் போர்க் குற்ற விசாரணைகள் தொடர்பில் மேலதிக முன்னேற்றத்தை காணத் தவறும் பட்சத்தில் சர்வதேச விசாரணையொன்றை முன்னெடுக்க ஊக்குவிக்கப்போவதாக பிரித்தானிய அரசாங்கம் மீள வலியுறுத்தியுள்ளது.
பிரித்தானிய வெளிநாட்டு மற்றும் பொதுநலவாய விவகாரம் சிரேஷ்ட அமைச்சரான பரோனெஸ் வார்ஸி பிரபுக்கள் சபையில் உரையாற்றுகையில், இலங்கையில் கடந்த வாரம் இடம்பெற்ற பொதுநலவாய உச்சிமாநாட்டில் பிரதமர் டேவிட் கமரூன் கலந்துகொண்டமை சரியானது எனத் தெரிவித்தார். பிரதமர் அவ்வாறு சென்றதன் மூலம் இலங்கையிலுள்ள நிலைமை தொடர்பில் கவனயீர்ப்பொன்றை ஏற்படுத்தியுள்ளதுடன் 1948ஆம் ஆண்டிற்கு பின்னர் அந்நாட்டின் வடபகுதிக்கு விஜயம் செய்த முதலாவது வெளிநாட்டு தலைவராகவும் அவர் உள்ளார் என பரோனெஸ் வார்ஸி தெரிவித்தார்.
அவரது தீர்மானம் ஊடகவியலாளர்களுக்கு அவ்விடத்தை சென்றடைவதற்கான அனுமதியை பெற்றுக்கொடுத்துள்ளது. இல்லையெனில் அவர்கள் அங்கு செல்வது சாத்தியமற்றதாகியிருக்கும். அத்துடன் உள்ளூர் மக்கள் காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு சர்வதேச ரீதியிலான குரல் கொடுக்கப்பட்டுள்ளது என அவர் மேலும் கூறினார்.
பிரதமர் தனது கண்ணோட்டங்களில் துணிகரமாகவும் முடிவாகவும் உள்ளார். அவர் ஜனாதிபதியுடன் (இலங்கை ஜனாதிபதியுடன்) மேற்கொண்ட வெளிப்படையான கடுமையான சந்திப்பில் அவர் போர் குற்றங்கள் தொடர்பில் நம்பகமான ஒழிவு மறைவில்லாத சுயாதீன விசாரணை உள்ளடங்கலாக ஒரு தொகை விடயங்களில் மேலும் முன்னேற்றம் காண்பதற்கு இலங்கைக்குள்ள தேவைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளார். இலங்கை அதனைச் செய்யத் தவறும் பட்சத்தில் பிரித்தானியா சர்வதேச விசாரணையொன்றுக்கு ஆதரவளிக்கும் என பரோனெஸ் வார்ஸி தெரிவித்தார்.
2