எனது வாழ்வின் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறேன் என தனது இரண்டாவது திருமணம் குறித்து நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் இயக்குநர் விஜய்.
‘கிரீடம்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான விஜய், ‘மதராசப்பட்டினம்’, ‘தெய்வத் திருமகள்’, ‘தலைவா’, ‘தேவி’, ‘வனமகன்’ உள்ளிட்ட ஏராளமான படங்களை இயக்கியுள்ளார். அவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் ‘தேவி 2’.
‘தெய்வத் திருமகள்’ மற்றும் ‘தலைவா’ படங்களில் நடித்தபோது விஜய் – அமலா பால் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். ஆனால், இரண்டே வருடங்களில் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட, விவாகரத்து பெற்றனர்.
இந்நிலையில், பெற்றோர்கள் வற்புறுத்தலால் இரண்டாவது திருமணம் செய்து கொள்கிறார் விஜய். சென்னை, மண்ணிவாக்கத்தைச் சேர்ந்த மருத்துவர் ஐஸ்வர்யாவை மணக்கிறார்.
இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள விஜய், “வாழ்க்கைப் பயணம் எப்போதுமே அனைவருக்கும் அதன் சொந்த வழியில் சிறப்பானது மற்றும் தனித்துவமானது. எல்லோருடைய வாழ்க்கையும் போலவே, என் வாழ்க்கையும் வெற்றி – தோல்வி, மகிழ்ச்சி – வலி ஆகியவற்றை உள்ளடக்கிய வெவ்வேறு கட்டங்களில் பயணித்து வந்துள்ளது.
ஆனால், இதுபோன்ற எல்லா சந்தர்ப்பங்களிலும் எனக்கு ஆதரவாக இருந்தது, பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களும், அவர்களின் ஆதரவும்தான். நான் அவர்களை நண்பர்கள் என்று அழைக்க மாட்டேன். அவர்கள் எனது குடும்பம். அவர்கள் எனது உணர்வுகளைப் புரிந்துகொண்டு, எனது தனியுரிமைக்கு மதிப்பளித்து, என் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து இனிமையான அணுகுமுறையுடன் நடந்து கொண்டனர்.
தற்போது எனது நலம் விரும்பிகளுக்கு, என் வாழ்வின் முக்கியமான துவக்கத்தைப் பற்றிய மகிழ்ச்சியான ஒரு செய்தியைப் பகிர்ந்துகொள்ள வேண்டிய அவசியத்தை நான் உணர்கிறேன். எனது குடும்பத்தினர், என் வாழ்க்கைத் துணைவியாக ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்துள்ளனர். டாக்டர் ஆர்.ஐஸ்வர்யாவுடன் எனது திருமணத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
2019 ஜூலையில் முற்றிலும் ஒரு குடும்ப விழாவாக இந்தத் திருமண நிகழ்வு நடக்க இருக்கிறது. உங்கள் முழு அன்பு மற்றும் ஆசிர்வாதங்களுடன் எனது வாழ்வின் புதிய அத்தியாத்தைத் தொடங்குகிறேன். உங்கள் வாழ்த்துகளுக்கும், மேலான ஆதரவுக்கும் நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.