விடுமுறை நாட்களில் சிம்பிளா சமைத்து, ருசியாக சாப்பிட நினைக்கிறீர்களா? அப்படியானால் இந்த இறால் தொக்கு ரெசிபி உங்களுக்கு பரிபூரணமான தேர்வாக இருக்கும்.
சுத்தம் செய்த இறாலை மசாலாவில் ஊறவைத்து, வெங்காயம், தக்காளி, மற்றும் மசாலா கலவைகளில் நன்கு வதக்கி, சுருக்கமாக சமைக்கும் இந்த தொக்கு, சாதம், சப்பாத்தி, இடியாப்பம், தோசை உள்ளிட்ட பலவகை உணவுகளுடன் அருமையாக சேரும்.
செய்முறை மிகவும் எளிது – முதல் நாளே செய்தும் வைக்கலாம், சுவை அதிகரிக்கும்.
ஒருமுறை செய்து பார்த்தால், மீண்டும் மீண்டும் செய்ய விரும்புவீர்கள்!
தேவையான பொருட்கள்:
ஊறவைக்கும் பொருட்கள்:
இறால் – ½ கிலோ
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – ¼ டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
தொக்குவிற்கு:
எண்ணெய் – 2½ டேபிள்ஸ்பூன்
கிராம்பு – 4
பட்டை – 2 துண்டுகள்
சோம்பு – ½ டீஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
பூண்டு – 2 பெரிய பல்லு (தட்டி வைத்தது)
சின்ன வெங்காயம் – 150 கிராம் (தட்டி வைத்தது)
தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)
குழம்பு மிளகாய் தூள் – 3 டீஸ்பூன்
கரம் மசாலா – ½ டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – ½ டம்ளர்
கொத்தமல்லி – சிறிதளவு (நறுக்கியது)
செய்முறை:
- முதலில் இறாலை நன்கு சுத்தம் செய்து, கழுவி விடவும்.
- பின்னர் ஒரு பாத்திரத்தில் இறாலை வைத்து, மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு மற்றும் இஞ்சி-பூண்டு விழுதுடன் நன்றாக கலந்து, 45 நிமிடம் ஊற விடவும்.
- பூண்டும் சின்ன வெங்காயமும் தோலை சீவி, தட்டில் தயார் வைத்துக் கொள்ளவும்.
- ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கிராம்பு, பட்டை, சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
- அதனுடன் தட்டி வைத்த பூண்டு, வெங்காயங்களை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
- பிறகு நறுக்கிய தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்கவும்.
- இப்போது குழம்பு மிளகாய் தூள், கரம் மசாலா மற்றும் உப்பைச் சேர்த்து நன்றாக கிளறி, மசாலா வாசனை போக விடவும்.
- பின்னர் ஊற வைத்த இறாலைச் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும். இறால் சிறிது நீர் விட்டுவிடும்.
- அதில் ½ டம்ளர் தண்ணீர் சேர்த்து கிளறி, மூடி வைத்து 10 நிமிடம் மிதமான தீயில் வேகவிடவும்.
- இறால் நன்கு வெந்ததும், மேல் கொத்தமல்லி தூவி கிளறி இறக்கலாம்.