ஒருவரின் வாழ்க்கையில் உண்மையான மகிழ்ச்சியை அளிக்கும் முக்கியமான அம்சங்களில் ஒன்றாக காதல் வாழ்க்கை கருதப்படுகிறது. ஆனால் அனைத்து காதல் உறவுகளும் திருமணத்தில் முடிவதில்லை. பல உறவுகள் பிரிவிலும் தோல்வியிலும் முடிவடைகின்றன. இப்படியான காதல் முறிவு ஆண், பெண் இருவருக்கும் மனரீதியாகவும் உணர்ச்சிரீதியாகவும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாகும்.
காதல் தோல்வியிலிருந்து மீண்டு வருவதற்கு இருவரும் சிரமங்களை எதிர்கொள்வது பொதுவானதாக இருந்தாலும், அந்த பாதிப்பின் தன்மை மற்றும் அதிலிருந்து மீளும் காலம் பாலினத்தைப் பொறுத்து மாறுபடுகிறது என அறிவியல் ஆய்வுகள் கூறுகின்றன. இதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட ஒரு சர்வதேச ஆய்வு காதல் முறிவின் தாக்கம் குறித்து முக்கியமான தகவல்களை வெளிப்படுத்தியுள்ளது.
இந்த ஆய்வு ‘எவல்யூஷனரி பிஹேவியரல் சயின்சஸ்’ இதழில் வெளியிடப்பட்டது. பிங்காம்டன் பல்கலைக்கழகம் மற்றும் யுனிவர்சிட்டி காலேஜ் இலண்டனைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் 96 நாடுகளைச் சேர்ந்த 5,705 பேரிடம் நேர்காணல் நடத்தினர். அவர்களிடம் காதல் முறிவின்போது ஏற்பட்ட உணர்ச்சி மற்றும் உடல் வலியை ஒன்று முதல் பத்து வரை மதிப்பிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
ஆய்வின் முடிவுகள் பெண்கள் காதல் முறிவால் உணர்ச்சி மற்றும் உடல் ரீதியாக அதிகம் பாதிக்கப்படுவதாக காட்டுகின்றன. ஆய்வில் பங்கேற்ற பெண்கள் தங்களின் உணர்ச்சி வேதனையை சராசரியாக 6.84 என மதிப்பிட்ட நிலையில், ஆண்கள் 6.58 என மதிப்பிட்டுள்ளனர். உடல் வலி தொடர்பாக பெண்கள் 4.21 எனவும், ஆண்கள் 3.75 எனவும் மதிப்பிட்டுள்ளனர்.
ஆனால் பெண்கள் ஆரம்பத்தில் அதிகமாக பாதிக்கப்படினும், அவர்கள் அந்த அனுபவத்திலிருந்து விரைவாக மீண்டு மன வலிமையை பெறுகின்றனர் என்று ஆய்வு குறிப்பிடுகிறது. பெண்கள் தங்களின் உணர்ச்சிகளை வெளிப்படுத்தி, உறவுகளில் தங்களின் தேவைகளை புரிந்துகொள்ள முயற்சிப்பது இதற்கு காரணமாகக் கூறப்படுகிறது.
மாறாக, ஆண்கள் காதல் முறிவை எதிர்கொள்ளும் விதம் வேறுபட்டதாக உள்ளது. சிலர் பிரிவின் உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல் இருக்க முயற்சிக்கலாம் அல்லது தவறான பழக்கங்களின் மூலம் மன அழுத்தத்தை சமாளிக்க முயற்சிக்கலாம் என ஆய்வு கூறுகிறது. இதனால் ஆண்களுக்கு அந்த அனுபவத்தை முழுமையாக புரிந்து கொண்டு அதிலிருந்து வெளியே வர அதிக நேரம் எடுக்கப்படலாம்.
மேலும், காதல் முறிவுக்குப் பிறகு ஒரு வருடத்திற்கு மேல் காலம் கடந்திருந்தாலும் சில ஆண்கள் இன்னும் உறவு இழப்பின் துயரத்தை அனுபவித்ததை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். பரிணாம வளர்ச்சியின் அடிப்படையில், துணையை இழப்பது ஆரம்பத்தில் ஆண்களுக்கு அதிக தாக்கத்தை ஏற்படுத்தாமல் இருந்தாலும், பின்னர் அதன் உண்மையான தாக்கத்தை அவர்கள் ஆழமாக உணரத் தொடங்குகிறார்கள் என ஆய்வு விளக்குகிறது.