முதல் உலகப்போர் முடிந்து, 100 ஆண்டுகளுக்குப் பின், பிரிட்டனில் அமைக்கப்பட்ட நினைவு சின்னம், ஐரோப்பா முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
கடந்த, 1914 ஜூலை 28 முதல், 1918 நவம்பர் 11 வரை, ஐரோப்பாவை மையமாகக் கொண்டு, முதல் உலகப் போர் நடந்தது. ஐரோப்பா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், பசிபிக் தீவுகள், சீனா, தெற்கு மற்றும் வட அமெரிக்காவின் கடற்பகுதிகளில் இந்தப் போர் நடந்தது.
போரின் முடிவில், ஜெர்மனி, ரஷ்யா, துருக்கி மற்றும் ஆஸ்திரியா, ஹங்கேரி பேரரசுகள் வீழ்ந்தன. ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு பகுதிகளில் புதிய நாடுகள் உருவாகின.
முதல் உலகப் போரில் உயிர் நீத்த தியாகிகளுக்கான நினைவு சின்னம், எவர்டன் பகுதியில் அமைந்துள்ள, புனித சேவியர்ஸ் தேவாலயத்திற்கு அருகில் உள்ள மைதானத்தில் அமைக்கப்பட்டது. காலப்போக்கில், கவனிப்பாரற்று, அந்த நினைவு சின்னம் அழிந்துவிட்டது.
இந்நிலையில், தற்போது, போரில் கலந்து கொண்டு உயிர் நீத்த, 48 வீரர்களுக்கு, மேற்கு பிரிட்டனில் உள்ள பிரிஸ்டல் நகரில் நினைவு சின்னம் உருவாக்கப்பட்டு உள்ளது.
இந்த நினைவு சின்னத்திற்காக, 6 அடி உயரமுள்ள சலவைக்கல் தேர்ந்தெடுத்து, அதில், உயிர் நீத்த, 48 வீரர்களின் பெயர்கள் பொறித்து உள்ளனர். நினைவு சின்னம் குறித்த தகவல், புகைப்படத்துடன் சமூகவலைத் தளங்களில் வெளியானதை அடுத்து, ஐரோப்பா முழுவதும் பிரபலம்அடைந்துள்ளது. பிரிஸ்டல் நகரவாசிகளின் இந்த புதிய முயற்சி, ஐரோப்பியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.