ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், பூட்டான், இந்தியா, மாலத்தீவு, நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய 8 நாடுகள் ஒன்றிணைந்து பிராந்திய கூட்டுறவுக்கான தெற்காசிய அமைப்பினை ‘சார்க்’ என்ற பெயரில் உருவாக்கியுள்ளன.
சார்க் நாட்டின் தலைவர்கள் மற்றும் மந்திரிகள் பங்கேற்கும் உச்சி மாநாடு சுழற்சி முறையில் மேற்கண்ட ஏதாவது ஒரு நாட்டில் நடத்தப்படுவது வழக்கம். அவ்வகையில், இந்த ஆண்டு நடத்த திட்டமிடப்பட்டுள்ள 18-வது சார்க் உச்சி மாநாடு நேபாளத்தில் நடைபெறும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
வரும் நவம்பர் மாதம் 26-ம் தேதி தொடங்கி 2 நாட்கள் நடைபெறும் இந்த உச்சி மாநாட்டில் தெற்காசிய நாடுகளின் தலைவர்கள் கூடி பிராந்தியத்தின் முக்கிய பிரச்சனைகள் தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளனர்.
அதற்கு முன்னதாக, நவம்பர் 22-ம் தேதி இந்த நாடுகளின் இணை செயலாளர்கள், 23, 24 ஆகிய தேதிகளில் வெளியுறவு துறை செயலகங்களின் நிலைக்குழு பிரதிநிதிகள், மற்றும் 25-ம் தேதி மந்திரிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.