ஐக்கிய பிரிட்டன் குடியரசின் ஒரு அங்கமாக செயல்பட்டு வரும் ஸ்காட்லாந்து தனி நாடாகப் பிரிவது குறித்து வரும் செப்டெம்பர் மாதம் 18-ம்தேதி பொதுமக்களிடையே வாக்கெடுப்பு நடத்த உள்ளது.
இதற்கு முன் அந்நாட்டின் மந்திரி அலெக்ஸ் சல்மாண்டும், இங்கிலாந்துடன் இணைந்திருப்பதே சிறந்தது என்ற பிரசாரத்தில் ஈடுபட்டுவரும் அமைப்பின் தலைவர் அலிஸ்டைர் டார்லிங்கும் தொலைக்காட்சி வாக்கெடுப்பு விவாதத்தில் நேருக்குநேர் பேச உள்ளனர்.
இதனிடையில் ஸ்காட்லாந்து மக்கள் தனிநாடு கோரிக்கையை கைவிட்டால் அந்நாட்டின் பாராளுமன்ற அதிகாரங்கள் வலுப்படுத்தப்படும். வரி மற்றும் சமூகப் பாதுகாப்பிற்கான அதிகார வரம்புகள் உயர்த்தப்படும் என்று ஒரு உறுதிமொழி அளிக்கப்பட்டுள்ளது. இந்த உறுதிமொழி அறிக்கையில் இங்கிலாந்தின் பிரதமர் கேமரூன், துணைப் பிரதமரும், லிபரல் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான கிலெக், தொழிற்கட்சித் தலைவர் மிலிபண்டு ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.
இங்கிலாந்துடன் இணைந்து செயல்படும் ஸ்காட்லாந்தின் பாராளுமன்ற அதிகாரங்களை வலுப்படுத்த ஆதரவு அளிப்பதாகவும் இந்த அறிக்கை குறிப்பிடுகின்றது. பொதுததேர்தல் முடிந்தவுடன் 2015-ம் ஆண்டிற்குள் விரைவிலேயே இந்த அதிகார மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் இதில் கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே முயற்சி செய்த அதே திட்டங்களை மீண்டும் செயல்படுத்துவதாக அறிவிக்கும் இந்தத் தலைவர்களின் அறிக்கையை மக்கள் தீவிரமாக எடுத்துக் கொள்ளமாட்டார்கள் என்று சல்மாண்டின் பெண் செய்தித் தொடர்பாளர் ஒருவர் குறிப்பிட்டார்.