வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் விசேட வைத்திய நிபுணர்களுக்கான விடுதி வடமாகாண சுகாதாரத்துறை அமைச்சின் ஏற்பாட்டில் வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரனால் கடந்த 08.08.214 அன்று திறந்து வைக்கப்பட்டது.
வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரன் தனது உரையில்,
வவுனியா மாவட்ட வைத்தியசாலை நவீன வசதிகளுடன் இன்றுள்ள வளர்ச்சி நிலையை அடைந்திருப்பதற்கு வைத்தியகலாநிதி ரி.சத்தியமூர்த்தியின் பங்களிப்பு மிகப்பெரியது. இங்கு அவர் (வவுனியா வைத்தியசாலையின் மருத்துவ அத்தியட்சகராக) பணியாற்றிய காலத்தில் மிகவும் சிறப்பான முறையில் பல பிரிவுகள், உள்கட்டுமானங்கள், பௌதீக வளங்களை தோற்றுவித்ததில் அவரின் பணி பாராட்டுக்குரியது என்றும் தெரிவித்தார்.
வன்னி பெருநிலப்பரப்பு மீதான சிறீலங்கா அரச படைகளின் தாக்குதல்களின் போது சிறீலங்கா அரசின் தடைகளால் மருந்து பொருள்கள் மற்றும் சத்திரசிகிச்சை உபகரணங்களுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டு, மருத்துவ உதவிகள் பெரும் ஆபத்தான கட்டத்தில் இருந்த போது, தாக்குதல்களுக்கு மத்தியில் மட்டுப்படுத்தப்பட்ட வளங்களுடன் சவால்களுக்கு மத்தியில் உன்னதமான மானுடநேய மருத்துவ சேவையை காயமடைந்த மக்களுக்கு வழங்கி பல உயிர்களை காத்தமைக்காக ஐக்கியநாடுகள் சபையின் உலக சுகாதார நிறுவனம் 2011ம் வருடம் “மனிதாபிமானத்துக்கான அனைத்துலக விருதை” வைத்தியகலாநிதி ரி.சத்தியமூர்த்திக்கு வழங்கி கௌரவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
2008-2009ம் வருட நெருக்கடியான காலப்பகுதியில் வைத்தியகலாநிதி ரி.சத்தியமூர்த்தி கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவுக்கான வைத்திய பணிப்பாளராக பணியாற்றியிருந்தமையும், தற்போது கொழும்பு பல்கலைக்கழகத்தில் மருத்துவ பட்டப்பின் படிப்புக்கான பிரிவில் விசேட மருத்துவ நிர்வாக பட்டப்பின் படிப்பை மேற்கொண்டு வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-கவரிமான்-