விவசாயிகள் (அதிகாரம் அளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாதம், பண்ணை சேவைகள் சட்டம், வேளாண் உற்பத்தி வர்த்தக (ஊக்குவிப்பு மற்றும் வசதி) சட்டம், அத்தியாவசிய பொருட்கள் (திருத்தம்) சட்டம் என 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த சட்டங்கள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதலை பெற்று, மத்திய அரசின் கெஜட்டில் கடந்த செப்டம்பர் 27-ந் தேதி வெளியிடப்பட்டு விட்டது.
இப்போது இந்த சட்டங்கள் தங்கள் நலனுக்கு எதிரானவை, இவை குறைந்தபட்ச ஆதரவு விலை முறையை முடிவுக்கு கொண்டு வந்துவிடும், விவசாயம் கார்ப்பரேட் நிறுவனங்களின் வசத்துக்கு போய் விடும் என அஞ்சி, அவற்றை திரும்பப்பெற வலியுறுத்தித்தான் டெல்லியில் வட மாநில விவசாயிகள் முற்றுகையிட்டு தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், இந்த சட்டங்கள் தொடர்பான அறிவிக்கைகளை வெளியிட மாட்டோம் என எதிர்க்கட்சிகள் ஆளுகிற சில மாநிலங்கள் கூறி உள்ளன. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மத்திய விவசாய அமைச்சகத்தின் மூத்த அதிகாரி கூறும்போது, “மத்திய அரசால் இயற்றப்பட்டுள்ள 3 வேளாண் சட்டங்கள் தேசிய சட்டங்கள் ஆகும். அவை அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து நடைமுறைக்கு வந்துள்ளன. எனவே ஒவ்வொரு மாநிலமும் தனியாக அறிவிக்கை வெளியிட தேவையில்லை. சில மாநிலங்களில், விவசாயிகள் ஏற்கனவே இந்த சட்டங்களின் விதிகளை பயன்படுத்தி வருகின்றனர்” என குறிப்பிட்டார்.
3 சட்டங்களில் ஒன்றுக்கு மட்டும் அறிவிக்கை வெளியிடும் வகையில் டெல்லி அரசுக்கு சிறப்பு ஏற்பாடு எதுவும் உள்ளதா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அந்த அதிகாரி, இது தேவையில்லை என பதில் அளித்தார். அரசியல் சாசன நிபுணரும், நாடாளுமன்ற மக்களவையின் முன்னாள் தலைமைச் செயலாருமான சுபாஷ் காஷ்யப் கருத்து தெரிவிக்கையில், “இந்த சட்டங்கள் தேசிய சட்டங்கள் ஆகும். இவை, நாடு முழுவதும் பொருந்தக்கூடியவை. எனவே ஒவ்வொரு மாநிலமும் தனித்தனியாக அறிவிக்கை வெளியிட வேண்டும் என்று நான் கருதவில்லை” என குறிப்பிட்டார்.