டி.என்.ஏ பரிசோதனை நடத்தினால் மட்டுமே நேதாஜி மரணத்தில் நீடிக்கும் மர்மம் விலகும் என அவரின் மகள் தெரிவித்துள்ளார்.
1945-ம் ஆண்டு ஆகஸ்ட் 18-ம் தேதி தைவான் நாட்டில் நடந்த விமான விபத்தில் இந்தியச் சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இறந்துவிட்டதாகவும், இறந்த நேதாஜியின் உடல் எரியூட்டப்பட்டு அதன் சாம்பல் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள ரெங்கோஜி கோயிலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஜப்பானில் உள்ள அந்தச் சாம்பலைக் கொண்டு செல்லும் படி அந்நாட்டு அரசு இந்தியாவுக்குப் பலமுறை கோரிக்கை விடுத்தது. ஆனால் நேதாஜி மரணத்தில் உள்ள மர்மம் விலகாததால், ஜப்பானில் உள்ள சாம்பலை இங்கு கொண்டுவர மத்திய அரசு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது.
இந்நிலையில், ஜப்பானில் உள்ள நேதாஜியின் சாம்பலைக் கொண்டு டி.என்.ஏ பரிசோதனை செய்ய வேண்டும் என நேதாஜியின் மகள் அனிதா போஸ், மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து பி.டி.ஐ ஊடக நிறுவனத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “1945-ம் ஆண்டு தைவானில் நடந்த விமான விபத்தில் என் தந்தை இறந்துவிட்டதாக நான் நம்புகிறேன். ஆனால், மக்கள் இதை நம்ப மறுக்கின்றனர். என் தந்தை மரணத்தில் உள்ள மர்மத்தை முடிவுக்குக் கொண்டு வர விரும்புகிறேன்.
ஆனால் அந்த ஆண்டு தைவானில் எந்த விமான விபத்தும் நடக்கவில்லை என அந்நாட்டு அரசு கூறியுள்ளதால் நேதாஜியின் மரணத்தில் சந்தேகம் எழுந்தது. பின்னர் 1970 -ம் ஆண்டு ரஷ்யாவுக்குச் சென்று அங்கேயே நேதாஜி இறந்துவிட்டதாகக் கூறப்பட்டது. இறுதியில், `நேதாஜி இறக்கவில்லை, அவர் வட இந்தியாவில் துறவியாக மறைமுகமாக வாழ்ந்து வந்தார். 1985-ம் ஆண்டு இறந்துவிட்டார்’ எனப் பல்வேறு கருத்துகள் தொடர்ந்து கூறப்பட்டு வந்தன.
உண்மையில் நேதாஜி எப்படி இறந்தார் என்பது இன்று வரையிலும் விலகாத மர்மமாகவே உள்ளது. தற்போது நடைபெறவுள்ள டி.என்.ஏ பரிசோதனையிலாவது அவர் இறப்பு பற்றி ஏதேனும் தகவல் கிடைக்கும் என அவரது குடும்பத்தினர் எதிர்பார்க்கின்றனர்.
நன்றி: விகடன்