புதிய வகை XE என்ற ஒமிக்ரோன் கொரோனா வைரஸ் இங்கிலாந்தில் மிக வேகமாக பரவி வருகிறது. இது இந்தியாவில் பரவி 04ஆவது அலையை உருவாக்கி விடுமோ என்ற அச்சம் சிலரது மனதில் எழுந்துள்ளது. ஆனால் XE வைரஸ் பற்றி பயப்படத்தேவை இல்லையென்று பிரபல மருத்துவ நிபுணர் ககன் தீப் கூறியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-
ஒமிக்ரோன் வைரஸ் பிரிவுகளின் BA1 மற்றும் BA2 ஆகிய 02 வைரஸ்களின் கலவையாக XE வைரஸ் உருவாகி இருக்கிறது. இது வேகமாக பரவும் என்பது உண்மைதான். ஆனால் அதற்காக அந்த வைரசை நினைத்து கவலைப்பட வேண்டியதில்லை.
கொரோனா வைரஸ் தொடக்கத்திலிருந்தே பல்வேறு உருமாற்றங்களை பெற்று வருகிறது. அதில் ஒரு சாதாரண உருமாற்றம் தான் XE வைரஸ்.
கொரோனா வைரஸ்களில் டெல்டா பிளஸ் வைரஸ் தான் மிக அதிக உயிரிழப்பை ஏற்படுத்தியது. ஆனால் XE வைரஸ் ரொம்ப சாதுவானது. அது எந்த ஆபத்தையும் ஏற்படுத்த போவதில்லை. எனவே எக்ஸ் வைரசால் மிகப் பெரிய ஆபத்து ஏற்பட வாய்ப்பே இல்லை. எனவே மக்கள் வழக்கம் போல இயல்பான நிலையில் இருக்கலாம்.
BA2 வைரஸ் தான் சற்று பாதிப்பை ஏற்படுத்தும் என்ற கவலை இருக்கிறது. அதில் இருந்து உருமாற்றம் பெற்றுள்ள XE பற்றி பயமில்லை.
மேலும் இந்தியாவில் கணிசமானவர்கள் தடுப்பூசி செலுத்துக் கொண்டுள்ளனர். எனவே எல்லோரையும் புதிய உருமாற்ற கொரோனா வைரஸ்கள் பாதிக்காது.
ஒமிக்ரோனை விட 10 மடங்கு அதிகமாக XE வைரஸ் பரவும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் தடுப்பூசி செலுத்தி இருப்பவர்கள் மத்தியில் அதன் பாதிப்பு இருக்காது. தடுப்பூசி செலுத்தாதவர்களை தான் இந்த வைரஸ் பாதிக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.