இந்தியாவின் இருந்து குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து இலண்டனுக்கு புறப்பட்ட விமானம், புறப்பட்ட சில வினாடிகளிலேயே விபத்துக்குள்ளானது
AI 171 என்ற இந்த விமானத்தில் 242 பேர் பயணம் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
விமான விபத்தை தொடர்ந்து விமான நிலையம் அருகே கரும்புகை வெளியேறி வருவதுடன், விமானத்தில் பயணித்தவர்களின் நிலை குறித்து அச்சம் ஏற்பட்டுள்ளது.
பிற்பகல் 1.07 மணியளவில் குறித்த ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நொடிகளிலேயே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதுடன், விமானம் டேக் ஆஃப் ஆனபோது விபத்து ஏற்பட்டதாக குஜராத் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Live Updates
ஏர் இந்தியா விமான விபத்து நடந்த இடத்திற்கு மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு கிஞ்சராபு நேரில் சென்று நிலைமையை ஆய்வு செய்தார்.
அகமதாபாத்தில் நடந்த விமான விபத்தில் காயமடைந்த 25 பேரின் பட்டியலை அகமதாபாத் பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையம் அருகே நடந்த விமான விபத்தில் காயமடைந்த 25 பேரின் பட்டியலை அகமதாபாத் பொலிஸார் வியாழக்கிழமை வெளியிட்டனர்.
அகமதாபாத் நகரில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் யாரும் உயிர்பிழைத்ததாகத் தெரியவில்லை என்று அந்நகர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, விமானம் குடியிருப்பு பகுதியில் விழுந்ததுடன், பி.ஜே. மருத்துவக் கல்லூரி விடுதியில் பயங்கரமாக மோதியுள்ளது. கட்டிடத்திற்குள் நுழைந்த விமானத்தின் வால் பகுதி மட்டுமே வெளியே தெரியும்படி காணப்பட்டது.
மதியம் நேரம் என்பதால் விடுதிக்கு மதிய உணவு அருந்த பயிற்சி டாக்டர்கள் வந்துள்ளனர். இதனால் பலர் இந்த விபத்தில் பாதிக்கப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த நிலையில், 5 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
விமானத்தில் பயணம் செய்தவர்களை தவிர, குடியிருப்பு மற்றும் ஹாஸ்டலில் உள்ளவர்களும் உயிரிழந்துள்ளதாக வந்துள்ள செய்தி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழப்பு தொகை 300ஐ தாண்டும் என அஞ்சப்படுகிறது.
அகமதாபாத் விமான விபத்து சம்பவம் குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி வருத்தம் தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ காங்கிரஸ் தொண்டர்களுக்கும் அழைப்பு விடுத்தார்.
அகமதாபாத் விமான நிலையம் 1650 IST முதல் விமான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. விமானப் பாதுகாப்பு நெறிமுறைகள் மிகுந்த கவனத்துடன் பின்பற்றப்படுகின்றன என்று சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் X பதிவில் தெரிவித்துள்ளது.
அஹமதாபாத் விமான நிலையத்திற்கு அருகே நடந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தால் நாங்கள் மிகவும் வருத்தமடைந்துள்ளோம் என இண்டிகோ நிறுவம் தெரிவித்துள்ளது.
எங்கள் எண்ணங்கள் பயணிகள், பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் உள்ளன. இந்த கடினமான நேரத்தில் ஏர் இந்தியாவுடன் நாங்கள் ஒற்றுமையாக நிற்கிறோம் என இண்டிகோ தெரிவித்துள்ளது.
அஹமதாபாத் விமான விபத்து தொடர்பாக குஜராத் மாநில அரசு மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் ஒரு கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளது.
சம்பந்தப்பட்டவர்கள் 079-232-51900 மற்றும் 9978405304 என்று தொலைபேசி இலக்கங்களில் குறித்த கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விமானம் மோதிய மருத்துவ விடுதியில் இருந்த பலர் மரணித்துள்ளனர் எனத் தெரியவருகின்றது.
அங்கிருந்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஐவர் இந்த விபத்தில் மரணித்துள்ளனர்.
விபத்துக்குள்ளான AI171 விமானத்தை செலுத்தியவர்கள் மிகவும் அனுபவம் வாய்ந்த விமானிகள் என்று குறிப்பிடப்படுகிறது.
விமானிக்கு 8,200 மணி நேரம் விமானம் செலுத்திய அனுபவம் உள்ளது.
அத்துடன், துணை விமானிக்கு 1,100 மணி நேரம் விமானம் ஓட்டிய அனுபவம் உள்ளது.
மீட்புப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
விபத்தில் சிக்கிய விமானத்தில் பயணித்த பயணிகளின் விவரங்கள் தற்போது வெளியாகி வருகின்றன.
குறித்த விமானத்தில் இந்தியாவைச் சேர்ந்த 169 பேர் பயணம் செய்துள்ளனர்.
அத்துடன், இங்கிலாந்தைச் சேர்ந்த 53 பேரும் போர்த்துக்கலைச் சேர்ந்த 7 பேர், கனடாவைச் சேர்ந்த ஒருவர் பயணித்தள்ளதாக BBC தகவல் வெளியிட்டுள்ளது.
விமானத்தில் மொத்தம் 242 பேர் பயணித்துள்ளனர். அவர்களில் 230 பேர் பயணிகள். 12 பேர் விமான ஊழியர்கள் ஆவர்.
இந்தியாவின் அஹமதாபாத் விமான நிலையத்தின் விமானச் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
அனைத்து விமானச் சேவைகளும் நிறுத்தப்பட்டிருப்பதாக சர்தார் வல்லபாய் படேல் அனைத்துலக விமான நிலையம், BBC செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளது.
விமானம் புறப்பட்ட பின் "mayday call" என்கிற அவசர உதவிக்கான அழைப்பை விடுத்தது. ஆனால், அதன் பின்னர் எந்தப் பதிலும் இல்லை.
அதாவது விமானம் சுமார் 625 அடியை எட்டிய பின்னர் அதன் தொடர்பு துண்டிக்கப்பட்டது.
எதனால் விமானம் விபத்துக்குள்ளானது, குடியிருப்புப் பகுதிக்கு ஏற்பட்ட பாதிப்பு ஆகியவை குறித்து இன்னும் தகவல் வரவில்லை.
ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான பகுதியில் குறைந்தது 30 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே AI171 விமானம், மருத்துவர் விடுதி இருந்த பகுதியில் விழுந்தது.
உயிரிழந்தவர்கள், விமானப் பயணிகளா அல்லது மருத்துவ விடுதியில் இருந்தவர்களா என்பது தெரியவில்லை.
இன்னும் பலர் உள்ளே சிக்கியிருப்பதாக மீட்புப் பணியாளர்கள் தெரிவித்தனர்.
அவர்களில் பெரும்பாலானோர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படுகிறது.
விபத்துக்குள்ளான விமானத்தில் பயணம் செய்த 242 பேரில் 11 சிறுவர்களும் உள்ளடங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
குறித்த விமானம் மருத்துவர்களுக்கான விடுதியொன்றில் விழுந்துள்ளதாக CNA தெரிவித்துள்ளது.
இந்த ஏர் இந்தியா விமான விபத்தில் பலர் உயிரிழந்துள்ளதாக அஞ்சுவதாக இந்தியச் சுகாதார அமைச்சர் ஜகத் பிரகாஷ் நட்டா தெரிவித்தார். எனினும், எத்தனை பேர் என்ற உத்தியோகபூர்வ தகவல் வெளியிடப்படவில்லை.
இலண்டன் கேட்விக் விமான நிலையத்திற்குச் செல்லவிருந்த நிலையில் விபத்துக்குள்ளான AI171 விமானம் குறித்து பொதுமக்கள் பலர் சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியிட்டு வருகின்றனர்.
பதிக்கப்பட்ட பலர் ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்படும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.
குறித்த விபத்து பொதுமக்கள் அதிகளவில் நடமாடும் இடத்திலேயே இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானமானது போயிங் 787 விமானம் என்பதுடன், போயிங் 787 விமானம் இப்படி விபத்துக்குள்ளாவது முதல் முறையாகும்.
இந்த விமான மொடல் 14 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது, மேலும் ஆறு வாரங்களுக்கு முன்புதான் விமானத் தயாரிப்பாளர், ட்ரீம்லைனர் என்றும் அழைக்கப்படும் இந்த மொடல் 1 பில்லியன் பயணிகளை ஏற்றிச் செல்லும் மைல்கல்லை எட்டியதை பாராட்டினார்.
அந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில், 1,175க்கும் மேற்பட்ட விமானங்களைக் கொண்ட உலகளாவிய 787 விமானக் குழு, 30 மில்லியனுக்கும் அதிகமான விமான நேரங்களை உள்ளடக்கிய கிட்டத்தட்ட 5 மில்லியன் விமானங்களை இயக்கியுள்ளது என்று நிறுவனம் கூறியது.
விபத்துக்குள்ளான விமானம் போயிங் 787-8 ட்ரீம்லைனர் என்பதுடன், போயிங் நிறுவனம் அறிக்கையொன்றை விடுத்துள்ளது.
"ஆரம்ப அறிக்கைகள் குறித்து எங்களுக்குத் தெரியும், மேலும் தகவல்களைச் சேகரிக்க நாங்கள் பணியாற்றி வருகிறோம்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.