தமிழகத்தில் ஜனநாயகத்தின் திருவிழாவாகக் கருதப்படும் சட்டப்பேரவைத் தேர்தல், நாளை வியாழக்கிழமை (23) நடைபெறவுள்ளது. மாநிலம் முழுவதும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் முழு வீச்சில் செய்யப்பட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளன.
நாளை காலை 7 மணிக்குத் தொடங்கும் வாக்குப்பதிவு மாலை வரை நடைபெறவுள்ளது. வாக்காளர்கள் அமைதியாகவும் பாதுகாப்பாகவும் தங்களின் வாக்குரிமையை பயன்படுத்தும் வகையில், பொலிஸார் மற்றும் மத்திய பாதுகாப்புப் படையினர் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்தத் தேர்தலில் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். மாநிலம் முழுவதும் சுமார் 5.73 கோடி வாக்காளர்கள் தங்களின் வாக்குரிமையைப் பயன்படுத்த உள்ளனர். இதற்காக 75,064 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற தீவிர பிரசாரங்கள் நேற்றுடன் நிறைவடைந்துள்ளன. இதனைத் தொடர்ந்து, தற்போது அமைதி காலம் அமுலில் உள்ளது. அரசியல் கட்சிகள் அனைத்தும் இறுதிக்கட்ட தயாரிப்புகளில் ஈடுபட்டுள்ள நிலையில், வாக்காளர்கள் தங்களின் தீர்ப்பை வழங்க தயாராக உள்ளனர்.
இந்த முறை தமிழக அரசியல் களத்தில் நான்கு முனை போட்டி நிலவி வருவது தேர்தலுக்கு கூடுதல் முக்கியத்துவத்தை அளிக்கிறது. முக்கிய கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுவதால், இந்தத் தேர்தல் முடிவுகள் மாநில அரசியலில் முக்கிய திருப்புமுனையாக இருக்கும் என அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.