ஜெர்மனியின் மியூனிக் விமான நிலையம் இன்று (30) தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக, அந்நாட்டு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
விமான நிலையத்தின் அருகில் சந்தேகத்திற்கிடமான வகையில் ட்ரோன் ஒன்று பறந்ததாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விமான நிலையப் பகுதியில் பணியில் இருந்த இரண்டு விமானிகள் வானில் பறந்துகொண்டிருந்த ட்ரோனை முதலில் அவதானித்துள்ளனர். இதையடுத்து சம்பவம் தொடர்பாக உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
அந்தத் தகவலைத் தொடர்ந்து பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை ஆரம்பித்தனர். ட்ரோன் எங்கிருந்து இயக்கப்பட்டது, அது விமானப் போக்குவரத்துக்கு ஏதேனும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியதா என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
பின்னர், பாதுகாப்புக் காரணங்களைக் கருத்தில்கொண்டு ஜெர்மன் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகளுடன் இணைந்து விமான நிலையத்தின் ஓடுபாதையை தற்காலிகமாக மூட தீர்மானிக்கப்பட்டது. இதன் காரணமாக சில விமான சேவைகள் தாமதமடைந்ததுடன், சில சேவைகளின் அட்டவணைகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டன.
விமானப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், ட்ரோனை இயக்கிய நபர் அல்லது குழுவை அடையாளம் காணும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் பொலிஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.