இங்கிலாந்தின் சவுதாம்ப்டன் நகரில், 18 வயது மாணவன் ஹென்றி நோவாக் (Henry Nowak) கொல்லப்பட்ட விவகாரத்தில் பொலிஸாரின் செயல்பாட்டைக் கண்டித்து நடத்தப்பட்ட போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்தது.
இந்த மோதலில் 11 பொலிஸார் காயமடைந்துள்ளனர். அத்துடன், ஒரு காவல் நாய் காயமடைந்தது. இதனையடுத்து இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2025 டிசெம்பரில், எசெக்ஸ் பகுதியைச் சேர்ந்த ஹென்றி நோவாக், தனது மாணவர் விடுதிக்குச் செல்லும் வழியில் விக்ரம் திக்வா (Vickrum Digwa) என்பவரால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். இந்தக் கொலைக்காக 23 வயதான திக்வாவுக்கு கடந்த திங்கட்கிழமை குறைந்தபட்சம் 21 ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன் கூடிய ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
கொலை நடந்த அன்று, தான் ஒரு இனவெறித் தாக்குதலுக்கு உள்ளானதாக திக்வா பொலிஸாரிடம் பொய் கூறினார். இதனை நம்பிய பொலிஸார், உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஹென்றியைக் கைவிலங்கிட்டு கைது செய்தனர். சமீபத்தில் வெளியான பொலிஸாரின் உடல் கேமரா (Bodycam) காட்சிகளில், “என்னால் சுவாசிக்க முடியவில்லை” என்று ஹென்றி கெஞ்சுவதும், தான் குத்தப்பட்டிருப்பதாக மீண்டும் மீண்டும் கூறுவதும் பதிவாகியுள்ளது.
தொடர்புடைய செய்தி – ஹென்றி கொலை: சவுத்தாம்ப்டனில் வெடித்த வன்முறை போராட்டத்தில் பொலிஸார் மீது தாக்குதல்!
செவ்வாய்க்கிழமை மாலை சவுதாம்ப்டன் பொலிஸ் நிலையத்திற்கு வெளியே தொடங்கிய போராட்டம், பின்னர் போர்ட்ஸ்வுட் (Portswood) பகுதியில் உள்ள கொலையாளி திக்வாவின் வீட்டின் அருகே நகர்ந்தது. அங்கு திரண்டிருந்த கூட்டத்தினர் பொலிஸார் மீது பாட்டில்கள், நாற்காலிகள் மற்றும் பட்டாசுகளை வீசித் தாக்குதல் நடத்தினர்,. இதில் அப்பாவி பொதுமக்களின் வீடுகள் மற்றும் வாகனங்களும் சேதமடைந்தன.
இந்த வன்முறை குறித்து கருத்து தெரிவித்துள்ள தலைமை காவலர் அலெக்சிஸ் பூன், காவல்துறையினருக்கு எதிரான இத்தகைய வன்முறையைச் சமூகம் ஏற்க முடியாது என்று கூறினார். மேலும், எதிர்வரும் நாட்களில் நகரில் கூடுதல் பொலிஸார் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.