நியூசிலாந்து நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜெசிந்தா ஆர்டெர்னுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ருவிற்றர் பதிவில், “நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்னின் மகத்தான வெற்றிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!
ஒரு வருடத்திற்கு முன்னர் நாம் கடைசியாகச் சந்தித்ததை நினைவு கூர்ந்து, இந்தியா-நியூசிலாந்து இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தி உயர் மட்டத்திற்குக் கொண்டு செல்வதற்காக, ஒன்றிணைந்து பணியாற்றுவதை எதிர்பார்க்கிறேன்” என மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
நியூசிலாந்தில் நேற்று நடைபெற்ற பொதுத்தேர்தலில் தற்போதைய பிரதமரான ஜெசிந்தா ஆர்டெர்னின் ஆளும் தொழிலாளர் கட்சி 49 வீத வாக்குகளைப் பெற்று அபார வெற்றி பெற்றது. பிரதான எதிர்க் கட்சியான தேசியக் கட்சி 27 வீத வாக்குகளை மட்டுமே பெற்றது.
இந்நிலையில், நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 120 இடங்களில் 64 இடங்களை ஜெசிந்தாவின் ஆளும் கட்சி கைப்பற்றியுள்ளது.
இதேவேளை, நியூசிலாந்தின் பிரதமராக இரண்டாவது முறையாகப் பதவியேற்கவுள்ள ஜெசிந்தாவுக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.