பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனக்கு முதுகெலும்புள்ளது என்பதை நிரூபித்துள்ளதைப் போன்று அமைச்சர் சஜித் பிரேமதாஸவும் நிரூபிக்க முடியுமா என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ சவால் விடுத்துள்ளார்.
நேற்று (சனிக்கிழமை) அவிசாவலைப் பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மஹிந்த மேலும் கூறியுள்ளதாவது, “ரணில், ஜனாதிபதி வேட்பாளராக வருவதாக அறிவித்துள்ளார். அவருக்கு அந்த பலம் இருக்கின்றது.
அதேபோன்று சஜித் பிரேமதாஸவும் முடியுமானால் இவ்வாறு அறிவிக்கட்டும்.
அவர் இவ்வாறு அறிவிப்பாரா? அல்லது ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதன் பின்னர், பிரதமர் பதவியை தருவதாக கூறியதும் ரணிலின் வலையில் விழுவாரா? என பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
இதேவேளை எங்களுடன் போட்டியிடுவதற்கு தனியாக அல்லது கூட்டாக வந்தாலும் அது பெரிய விடயமே அல்ல. காரணம், நாங்கள் வெற்றி பெறுவோம் என்பதற்கு மாற்றுக்கருத்து இல்லை” என குறிப்பிட்டுள்ளார்.