கூட்டு ஒப்பந்தம் இனிமேல் முத்தரப்பு ஒப்பந்தமாக இருக்க வேண்டும் என மலையக மக்கள் முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.
அத்துடன், காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களைப் பெரும்பான்மையினர் தம்வசம் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே, தற்போது வட மாகாணக் காணி ஆவணங்கள் அநுராதபுரத்திற்கு மாற்றப்படுகின்றன என முன்னணியின் தலைவர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
மலையக மக்கள் முன்னணியின் மகளிர் தின விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஹற்றனில் முன்னணியின் தலைமைக் காரியாலய மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் பேசுகையில், “கூட்டு ஒப்பந்தம் இனிமேல் முத்தரப்பு ஒப்பந்தமாக இருக்க வேண்டும். ஏனேனில், மலையக மக்களின் பிரச்சினை இதன்போது அரசாங்கத்திற்கு தெளிவுப்படுத்தப்படும். தற்போது கூட்டு ஒப்பந்தத்தில் தொழிற்சங்கங்களும், கம்பனிகளுமே கைச்சாத்திடுகின்றன. எனவே, மூன்றாவது தரப்பாக அரசாங்கத்தையும் இணைத்துக்கொள்ள வேண்டும்.
நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப் பிரச்சினையைத் தீர்க்க சிங்களவர்களின் ஒத்துழைப்பும் அவசியம். அதேபோல், பெண்கள் பிரச்சினையைத் தீர்க்க வேண்டுமாயின் ஆண்களின் அனுசரணை அவசியம்.
தற்போதைய நிலையில் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களைப் பெரும்பான்மையினர் தம்வசம் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே தற்போது வட மாகாண காணி ஆவணங்கள் அநுராதபுரத்திற்கு மாற்றப்படுகின்றன. மக்களின் உரிமைகளைப் பறிக்கும் செயற்பாடுகளையே அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது” என்று குறிப்பிட்டுள்ளார்.