சோசலிச வாலிபர் சங்கத்தினால் நேற்று (24) கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்ட எரங்க குணசேகர உள்ளிட்ட மூவர் சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இன்றையதினம் (25) மருதானை, மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் இவர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, நீதிமன்றம் குறித்த உத்தரவை விடுத்துள்ளது.
குறித்த நபர்களை தலா ரூபா 2 இலட்சம் கொண்ட சரீர பிணையில் விடுவிக்குமாறு நீதிமன்றம் இதன்போது உத்தரவிட்டது.
நேற்றையதினம் (24) இடம்பெற்ற இவ்வார்ப்பாட்டப் பேரணி சட்டவிரோதமாக ஒழுங்கு செய்யப்பட்டதாக தெரிவித்து, 77 ஆண்களும், 4 பெண்களும், 2 பௌத்த பிக்குகளும் கைது செய்யப்பட்டதாக, பொலிஸார் அறிவித்திருந்தனர்.
அதற்கமைய, இவ்வாற கைது செய்யப்பட்ட 83 பேரில் குறித்த மூவரும் சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், ஏனைய 80 பேரும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.