அரசமைப்புப் பேரவையின் கூட்டம் நாளை புதன்கிழமை முற்பகல் 9.30 மணிக்கு நடைபெறவுள்ளது என்று பதவியணித் தலைமை அதிகாரியும் நாடாளுமன்றப் பிரதிச் செயலாளர் நாயகமுமான குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.
சபாநாயகர், பிரதமர் மற்றும் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரின் இணக்கப்பாட்டுடன் சபாநாயகரால் பெயர் குறிப்பிடப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லாத நபர்களை அரசமைப்புப் பேரவையின் உறுப்பினர்களாக நியமிப்பதற்கான நியமனம் அண்மையில் ஜனாதிபதியால் வழங்கப்பட்டது.
இதன்படி கலாநிதி பிரதாப் இராமானுஜம், வைத்தியகலாநிதி தில்குஷி அனுலா விஜேசுந்தர, கலாநிதி வெலிகம விதான ஆராச்சிகே தினேஷா சமரரத்ன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கலாநிதி இராமானுஜம் அரச சேவைகள் ஆணைக்குழுவின் உறுப்பினராக செயற்பட்டிருப்பதுடன், ஒரு தசாப்தத்துக்கு மேலாக பல அமைச்சுக்களின் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். தில்குஷி அனுலா விஜேசுந்தர துறைசார் வைத்திய நிபுணராவார். கலாநிதி தினேஷா சமரரத்ன கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளராகப் பணியாற்றுகின்றார்.