செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் தரமான காய்கறிகளை தேர்ந்தெடுப்பது எப்படி?

தரமான காய்கறிகளை தேர்ந்தெடுப்பது எப்படி?

1 minutes read

எந்தக் காயை, எப்படி பார்த்து வாங்க வேண்டும் என்பது தெரிந்தால் மட்டுமே, தரமான காய்கறிகளை தேர்ந்தெடுக்க முடியும். அதற்கான சில டிப்ஸ் இங்கே…

சந்தையில் விற்கும் காய்கறிகளில் தரமானவற்றைப் பார்த்து வாங்குவது என்பது தனி கலை. மேலோட்டமாக பார்க்கும்போது எல்லா காய்கறிகளும் புதியது போல இருக்கும். எந்தக் காயை, எப்படி பார்த்து வாங்க வேண்டும் என்பது தெரிந்தால் மட்டுமே, தரமான காய்கறிகளை தேர்ந்தெடுக்க முடியும். அதற்கான சில டிப்ஸ் இங்கே…

முருங்கைக்காய்:

முருங்கைக்காய் வாங்கும்போது அதன் மேல் பகுதியையும், கீழ் பகுதியையும் பிடித்து மென்மையாக முறுக்கினால் காய் உடையக் கூடாது. காயின் மேல் தோல் இளம் பச்சை நிறமாக இருக்க வேண்டும். இவ்வாறு இருந்தால் மட்டுமே, அது பிஞ்சுக் காயாக இருக்கும். முற்றிய காய் லேசாக காய்ந்தும், கசப்புத்தன்மையும் பெற்றுவிடும். சதைப் பற்று அதிகமாக இருக்கக்கூடிய காய்களைத் தேர்ந்தெடுக்கும்போது, உருண்டையான காய்களைதான் எடுக்க வேண்டும்.

கீரை வகைகள்:

கீரைக் கட்டை எடுத்து விரித்து, உள்பகுதியில் தண்டு அழுகி உள்ளதா? முற்றிய நிலையில் உள்ளதா? என்று பார்க்க வேண்டும். இலைகளில் பூச்சிகள் அரித்து இருந்தாலும், பழுத்த இலைகள் அதிகமாக இருந்தாலும் அந்தக் கீரையை வாங்குவதைத் தவிர்த்து விட வேண்டும். பழைய கீரையாக இருக்கும் பட்சத்தில் ஒருவிதமான துர்நாற்றம் அதிலிருந்து வெளிவரும். அதை முகர்ந்து பார்த்து கண்டுபிடிக்கலாம். கீரைக் கட்டில் பூக்கள் அதிகமாக இருந்தாலும் வாங்க வேண்டாம்.

கத்திரிக்காய்:

கத்திரிக்காயை வாங்கும்போது மேற்பகுதியில் சொத்தை இருக்கிறதா என்று முழுவதும் பார்த்த பின்பு, பூச்சி அரிக்காத காயை வாங்க வேண்டும். காம்பு பசுமையாக இருக்கும் கத்தரிக்காய்களை தேர்வு செய்து எடுக்க வேண்டும். காம்பு சிறிதாக இருக்கும் காயை தவிர்க்கலாம். ஏனென்றால் இது சற்று கசப்புத்தன்மையுடன் இருக்கும்.

வெண்டைக்காய்:

பிஞ்சாக இருக்கும் வெண்டைக்காயின் காம்பினை மென்மையாக உடைத்தால், பட்டென்று உடையும். இவ்வாறு உடையாமல் உறுதியாக இருந்தால், அவை முற்றிய காய்கள் ஆகும். அவற்றை சமையலுக்குப் பயன்படுத்தக்கூடாது. மேலும் பூச்சி அரித்த ஓட்டைகள் இல்லாதவாறு பார்த்து வாங்குவதும் அவசியம். வாடி வதங்கி இருக்கும் காய்களை வாங்க வேண்டாம்.

உருளைக் கிழங்கு:

கிழங்கு வகைகளைத் தேர்ந்தெடுக்கும்போது, எடை அதிகம் உள்ள கிழங்குகளை வாங்க வேண்டும். உருளைக் கிழங்கில் எந்தவித பச்சை நிறமும் இல்லாமல், சுரண்டி பார்க்கும்போது எளிதில் தோல் உரியக்கூடிய கிழங்குகளைத் தேர்வு செய்து வாங்க வேண்டும்.

மேற்கூறிய முறையில் தரமான காய்கறிகளை வாங்கி, அவற்றை உப்பு மற்றும் மஞ்சள் பொடி கலந்த நீரில் கழுவ வேண்டும். பின்பு அவற்றை ஈரமில்லாமல் உலர்த்தி, குளிர்சாதனப் பெட்டியில் பக்குவமான முறையில் வைத்துக்கொள்ளலாம்.

நன்றி | மாலை மலர்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.