இலங்கை வலைபந்தாட்ட சம்மேளனத்தின் புதிய தலைவராக விக்டோரியா லக்ஷ்மி தெரிவாகியுள்ளார்.
இலங்கை வலைபந்தாட்ட சங்கத்துக்காக எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்கு (20−22-24) புதிய நிர்வாகிகளைத் தெரிவு செய்யும் தேர்தல் விளையாட்டுத்துறை அமைச்சின் டன்கன் வைட் கேட்போர் கூடத்தில் (31) நடைபெற்றது.
32 அங்கத்துவ சங்கங்களின் பங்குபற்றலுடன் நடைபெற்ற இத்தேர்தலில் தேசிய சேவைகள் வலைபந்தாட்ட சங்கம் சார்பாக தலைவர் பதவிக்கு போட்டியிட்ட விக்டோரியா லக்ஷ்மி 21 வாக்குகளை பெற்றுக்கொள்ள, அவரை எதிர்த்து மேல் மாகாண வலைபந்தாட்ட சங்கம் சார்பாக போட்டியிட்ட க்லெரில் டோசருக்கு 11 வாக்குகளும் கிடைத்தன.
வலைபந்தாட்ட சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும், ஆசிய வலைபந்தாட்ட சங்கத்தின் உதவித் தலைவருமான லக்ஷ்மி விக்டோரியா 10 மேலதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று மீண்டும் இலங்கை வலைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவராக தெரிவாகினார்.
இதற்கு முன் இரண்டு தடவைகள் இவர் இலங்கை வலைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவராக பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.