
திருகோணமலை மாவட்ட பெண் இலக்கிய ஆளுமைகளை ஒருங்கிணைத்து கலைத்துறைசார் வாண்மையை மேலும் முன்னோக்கி நகர்த்தும் நோக்கில் ‘ஒரு பொழுதில் ஒன்று கூடுவோம்’ எனும் தொனிப்பொருளில் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒன்றுகூடல் அன்மையில் மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் திருமதி சரண்யா சுதர்ஷன் தலைமையில் இடம்பெற்ற இந்த ஒன்றுகூடல் நிகழ்வுக்கு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி ஜே.ஜே.முரளிதரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இந்த ஒன்றுகூடலின் வளவாளர்களாக தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜெயகௌரி ஸ்ரீபதி, திருகோணமலை மெதடிஸ்த மகளிர் கல்லூரியின் அதிபர் திருமதி சுபத்திரா ஜோன் தேவதாஸ், திருகோணமலை புனித மரியாள் கல்லூரியின் அதிபர் அருட்சகோதரி நிரோஷா, முன்பள்ளி அதிபர் அருஷா ஜெயராஜா, சட்டத்தரணி திருமதி ஐஸ்வர்யா சிவகுமார், பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஓய்வுபெற்ற மாகாணப் பணிப்பாளர் திருமதி என்.ஸ்ரீதேவி, கிழக்கு பல்கலைக்கழக நூலகர் திருமதி பானு சுதாகரன், சுதந்திர ஊடகவியலாளர் கல்யாணி நவரெத்தினம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது தற்கால இடர் மிகுந்த சூழலை எதிர்கொள்வதில் பெண்களின் பங்களிப்பு, பெண்களும் சட்டமும், பெண் ஆளுமையும் இன்றைய நிலையும், நிர்வாகத்தில் பெண்கள் எதிர்நோக்கும் சவால்கள், பெண்களும் நிர்வாக ஆற்றலும், பேகர் சமூக பண்பாடும் தற்காலத்தின் சவால்களும், பெண் தலைமைத்துவ குடும்பமும் தற்காலத்தில் அவர்கள் எதிர்நோக்கும் சவால்களும், பெண்களும் அரசியலும், அரங்கும் பெண்களும், தற்கால கல்வி முறைமையில் பெண்கள் எதிர்நோக்கும் சவால்கள், முன்பள்ளி ஆசிரியர்கள் சமூகத்தில் எதிர்கொள்ளும் சவால்கள் என்ற தலைப்புக்களில் பல்வேறுபட்ட முக்கிய விடயங்கள் பேசப்பட்டன. பாடல், வயலின் இசை, கவிதை, நாடகம், கூத்து போன்ற நிகழ்வுகளும் பெண்களினால் நிகழ்த்தப்பட்டன.
இந்த ஒன்றுகூடலில் கலந்து கொண்ட திருகோணமலை மாவட்ட பெண் இலக்கிய ஆளுமைகளை கௌரவித்து அவர்களுக்கான சான்றிதழ் மற்றும் திணைக்களத்தினால் வெளியீடு செய்யப்பட்ட 100 சிறுகதை அடங்கிய நூல்களை கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் சரண்யா சுதர்சன் வழங்கி வைத்தார்.