கடந்த ஜூன் மாதம் 12ஆம் திகதி அகமதாபாத் நகரில் இருந்து இலண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது.
இந்த விமானத்தில் பயணம் செய்த 241 பேர் உயிரிழந்தனர். இங்கிலாந்து பிரஜையான விஷ்வாஷ் குமார் ரமேஷ் மாத்திரமே உயிர்தப்பினார்.
இந்நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் இறுதிச் சடங்குகளை முன்னெடுப்பதற்காக குடும்பத்தாருக்கு ஒப்படைக்கப்பட்ட உடல்கள் தவறாக மாறி ஒப்படைக்கப்பட்டதாக இங்கிலாந்தைச் சேர்ந்த 20 குடும்பங்கள் வழக்குத் தாக்கல் செய்துள்ளன.
தொடர்புடைய செய்தி : Boeing விமானங்களில் சுவிட்ச் கோளாறு இல்லை என்கிறது ஏர் இந்தியா!
அவ்வாறு பாதிக்கப்பட்ட 20 குடும்பங்களை சட்டத்தரணி ஜேம்ஸ் ஹீலி பிராட் பிரதிநிதிக்கிறார்.
இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது, “ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தார் தவறானவர்களின் உடல்களைப் பெற்றனர்.
“ஒரு குடும்பத்தார் தங்கள் உறவினர் அல்லாதவரின் உடலைப் பெற்றுள்ளனர். இன்னொரு குடும்பத்தார் பெற்ற சவப்பெட்டியில் ஒன்றுக்கும் அதிகமானோரின் உடற்பாகங்கள் இருந்தன” என சட்டத்தரணி தெரிவித்தார்.
இவ்விடயம் குறித்து இந்திய வெளியுறவு அமைச்சு, “ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தோரின் உடற்பாகங்கள் அனைத்தும் மரியாதையுடன் கையாளப்பட்டன” எனக் குறிப்பிட்டுள்ளது.
மேலும், சம்பவம் குறித்து இங்கிலாந்து அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் இந்திய வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.