மக்களின் மனதை கவர்ந்த உணவுகளில் பிரியாணிக்கு எப்போதும் தனி இடம் உண்டு. பிரியாணி என்றாலே பலருக்கும் முதலில் நினைவிற்கு வருவது சிக்கன் அல்லது மட்டன் பிரியாணிதான். ஆனால், சைவ உணவு விரும்பிகளுக்காக வெஜிடபிள், பன்னீர், காளான் போன்ற பல வகை பிரியாணிகளும் இன்று மிகவும் பிரபலமாக உள்ளன.
அந்த வகையில், சாதாரணமாக வீட்டில் இருக்கும் கத்திரிக்காயை வைத்து கூட அசத்தலான காரசாரமான பிரியாணி செய்யலாம்.
குறிப்பாக குழந்தைகளுக்கு பிரியாணி பிடித்திருந்தால், இந்த கத்திரிக்காய் பிரியாணியை அடிக்கடி செய்து கொடுக்கலாம். இது பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கு மதிய உணவாகவும் இருக்கும்.
மசாலாவின் மணமும், கத்திரிக்காயின் மென்மையான சுவையும் சேர்ந்து இந்த பிரியாணியை இன்னும் ருசியாக மாற்றும். சுலபமாக செய்யக்கூடிய இந்த ரெசிபி, குறைந்த பொருட்களிலேயே அதிக சுவையை தரும்.
தேவையான பொருட்கள்:
– அரிசி – 1 கப்
– நெய் – 2 ஸ்பூன்
– பெரிய வெங்காயம் – 1
– பழுத்த தக்காளி – 2
– தயிர் – 2 ஸ்பூன்
– பச்சை மிளகாய்கள் – 3
– பட்டை – 1 இன்ச்
– கிராம்பு – 3
– ஏலக்காய் – 2
– கல்பாசி – சிறிதளவு
– பிரிஞ்சி இலை -1
– சோம்பு – 1/2 ஸ்பூன்
– புதினா இலைகள் – சிறிதளவு
– கொத்தமல்லி இலைகள் – சிறிதளவு
– தண்ணீர் – 2 கப்
கத்திரிக்காயில் அடைத்து ஊறவைக்க:
– இஞ்சி-பூண்டு விழுது – 1 ஸ்பூன்
– மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்
– தனியாதூள் – 1 ஸ்பூன்
– கரம் மசாலா தூள் – 1/2 ஸ்பூன்
– எலுமிச்சைச் சாறு – தேவையான அளவு
செய்முறை:
– கத்திரிக்காய்களை நன்றாகக் கழுவி, காம்பை நீக்காமல் நான்கு துண்டுகளாகக் கீறவும். அரிசியை நன்றாக கழுவி ஊற வைத்துக் கொள்ளவும்.
– நிறம் மாறுவதைத் தவிர்க்க, சமையலுக்குப் பயன்படுத்தும் வரை அவற்றை நீரில் மூழ்கவைத்து வைக்கவும்.
– மிளகாய் தூள், கரம் மசாலா, தனியா தூள் அனைத்தையும், இஞ்சி-பூண்டு விழுதுடன் எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்கு கலக்கவும். இந்த கலவையை கத்திரிக்காய்களுக்குள் நிரப்பி, 20 நிமிடங்களுக்கு ஊறவிடவும்.
– ஒரு பிரஷர் குக்கரில் நெய்யை ஊற்றிச் சூடாக்கி, முழு கரம் மசாலா மற்றும் சோம்பு ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும்.
– பின்னர் நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் கீறிய பச்சை மிளகாயைச் சேர்க்கவும். வெங்காயம் கண்ணாடி போன்ற பதம் வரும் வரை வதக்கவும். பின்னர் நறுக்கிய தக்காளித் துண்டுகளைச் சேர்த்து, அவை குழைந்துப் போகும் வரை வதக்கவும்.
– இப்போது ஊறவைத்த கத்தரிக்காயைச் சேர்த்து, அது சருமம் சுருங்கும் வரை நன்றாகக் கலக்கவும். பின்னர் புதினா மற்றும் கொத்தமல்லி இலைகளைச் சேர்க்கவும்.
– நன்றாகக் கலந்த பிறகு, தயிரைச் சேர்க்கவும். இதை நன்கு கிளறி, தேவையான அளவு உப்புடன் நீரைச் சேர்க்கவும்.
– தண்ணீர் நன்கு கொதித்ததும் ஊறவைத்த அரிசியைச் சேர்த்து, நன்றாகக் கலந்து, குறைந்த தீயில் ஒரு விசில் வரும் வரை பிரஷர் குக்கரில் வேக வைக்கவும்.
– பிரஷர் வெளியேறியதும் குக்கர் மூடியைத் திறந்து நன்றாக கிளறி விடவும். அவ்வளவுதான் சூப்பரான கத்திரிக்காய் பிரியாணி ரெடி. இதை தயிர் வெங்காயத்துடன் பரிமாறவும்.