இங்கிலாந்தில் கல்லீரல் கட்டி சிகிச்சைத் துறையில் புதிய முன்னேற்றமாக, முதல் முறையாக ரோபோ வழிகாட்டும் எலக்ட்ரோகீமோதெரபி (Electrochemotherapy) சிகிச்சை வெற்றிகரமாக வழங்கப்பட்டுள்ளது.
இந்த புதுமையான சிகிச்சை, வடக்கு யார்க்ஷயரில் உள்ள ஹாரோகேட் பகுதியைச் சேர்ந்த 92 வயதான பிரெண்டா ஐவ்சன் என்பவருக்கு மேற்கொள்ளப்பட்டது.
வயது மற்றும் உடல்நிலை காரணமாக அவருக்கு வழக்கமாக வழங்கப்படும் அறுவை சிகிச்சை, கீமோதெரபி மற்றும் ரேடியோதெரபி போன்ற சிகிச்சைகள் பொருத்தமானதாக இருக்கவில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மேலும், கல்லீரல் கட்டி அமைந்திருந்த இடமும் சிகிச்சை அளிப்பதில் சவாலாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மாற்று சிகிச்சை முறையாக ரோபோ உதவியுடன் எலக்ட்ரோகீமோதெரபி சிகிச்சையை மருத்துவக் குழு தெரிவு செய்தது.
இந்த சிகிச்சை முறையில், குறைந்த அளவிலான கீமோதெரபி மருந்துகளுடன் மின்துடிப்புகள் பயன்படுத்தப்பட்டு, புற்றுநோய் செல்களை நேரடியாக தாக்கும் வகையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதன்மூலம் கட்டியின் அளவை குறைத்து நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியும்.
இந்த சிகிச்சை பிரெண்டா ஐவ்சனுக்கு சுமார் 80 சதவீதம் வரை பலனளித்துள்ளது. சிகிச்சைக்குப் பிறகு தனது உடல்நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், முன்பு சிகிச்சைக்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாக இருந்த நிலையில் இந்த புதிய முறை தனக்கு புதிய நம்பிக்கையை வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வெற்றிகரமான சிகிச்சை, எதிர்காலத்தில் சிக்கலான கல்லீரல் கட்டிகள் மற்றும் புற்றுநோய் நோயாளிகளுக்கான புதிய சிகிச்சை வாய்ப்புகளை உருவாக்கும் என மருத்துவ நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.