முன்னாள் அரச புலனாய்வுப்பிரிவின் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தடுப்புக்காவல் உத்தரவில் கையொப்பமிடாது, உரிய சதாரண சட்ட நடைமுறைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்வதாக சுதேசிய ஜனபலய அமைப்பின் பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இலங்கை சுதந்திரக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது சுதேசிய ஜனபலய அமைப்பின் பிரதிநிதிகள் கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தானர்.
அங்கு அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
முன்னாள் அரச புலனாய்வுப்பிரிவின் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே எவ்வித ஆதாரங்களுமின்றி சுமார் 177 நாட்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
அவரது தடுப்புக்காவல் உத்தரவு நீடிக்கபடவுள்ள நிலையில் முறையான சட்ட நடைமுறைளைப் பின்பற்றி விசாரணைகளை நடத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நீதியை நடைமுறைப்படுத்த வேண்டிய தரப்பினரின் எந்தவித பொறுப்புணர்வுமின்றி பழிவாங்கும் நோக்கில் இந்த தடுப்புக் காவல் நீடிக்கப்படுகின்றது.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சுரேஷ் சலேயின் தடுப்புக்காவல் உத்தரவை நீடிக்க இன்னும் மூன்று நாட்களே எஞ்சியுள்ளன. இந்த தடுப்புக்காவல் உத்தரவில் கையெழுத்திடாமல் தகுந்த சட்ட நடைமுறைகளின்படி விசாரணைகளை முன்னெடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் என்றனர்.