செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் சொட்டு மருந்து போதும்… ஆயுளுக்கும் கண்ணாடி அணியத் தேவையில்லை! அசத்தல் நானோ டிராப்ஸ்!

சொட்டு மருந்து போதும்… ஆயுளுக்கும் கண்ணாடி அணியத் தேவையில்லை! அசத்தல் நானோ டிராப்ஸ்!

2 minutes read

பார்வைக் கோளாறு வந்துவிட்டதா? அவ்வளவுதான். `இனி காலம் பூரா  கண்ணாடியோடதான் அலையணுமா?’ என்பது பலரின் ஆதங்கமாக மாறிவிடும். ஸ்டைலுக்கு கூலிங்கிளாஸ் அணிவதை விரும்புகிறவர்கள்கூட, பார்வைக் கோளாறுக்காக கண்ணாடி அணிய விரும்புவதில்லை. இதன் பொருட்டே கண் அறுவைசிகிச்சை

செய்துகொள்கிறவர்களும் உண்டு. இந்தப் பிரச்னைக்குப் புதிதாக வழி பிறந்திருக்கிறது. ` சொட்டு மருந்தை கண்களில் விட்டால் போதும். ஆயுளுக்கும் கண்ணாடியும் தேவையில்லை, அறுவைகிச்சையும் தேவையில்லை’ என்கிறது  இஸ்ரேலில் அண்மையில் நடந்த ஓர் ஆய்வு. அதோடு, `மருத்துவரிடம்கூடப் போகத் தேவையில்லை. உங்கள் ஸ்மார்ட்போன்தான் உங்கள் மருத்துவர். அதைக்கொண்டு பரிசோதித்து, நீங்களே பார்வைக் குறைபாட்டுக்கு தீர்வு கண்டுகொள்ளலாம்’ என்று சொல்லி ஆச்சர்யப்படவைக்கிறது அந்த ஆய்வு.

பார்வை குறைபாடு

அது கிட்டப்பார்வையோ, தூரப்பார்வையோ… பார்வைக் குறைபாடுகளுக்கு மொபைல்ஆப் உதவியுடன் ‘நானோ டிராப்ஸ்’ (Nanoparticle Eye drops) என்னும் சொட்டு மருந்தைவிட்டு சரி செய்யலாம் என்பதைக்  கண்டறிந்திருக்கிறார்கள். இஸ்ரேலின் ஷாரே ஸெடெக் மருத்துவ மையமும் (Israel’s Shaare Zedek Medical Center) பார்-இலான் பல்கலைக்கழகமும் (Bar-Ilan University) இணைந்து நடத்திய ஆய்வில் இந்த சொட்டு மருந்து கண்டறியப்பட்டிருக்கிறது.

“முதலில் உங்கள் மொபைல்போனில் இதற்கான பிரத்யேகமான ஆப்-ஐ பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். மொபைல்போனிலிருந்து வெளிப்படும் லேசர் ஒளியைக்கொண்டு சில நிமிடங்கள் கண்களின் கார்னியாவை ஸ்கேன் செய்ய வேண்டும். கடைசியாக, கண்ணில் இந்த டிராப்ஸை விட்டால் போதும்… கிட்டப்பார்வை, தூரப்பார்வைக் கோளாறுகளைச் சரிசெய்துவிடும்” என்கிறார்கள் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டவர்கள்.

முதல் கட்டமாக, பன்றிகளுக்கு இந்தப் பரிசோதனை செய்யப்பட்டு வெற்றிகரமாக முடிந்திருக்கிறது. இந்த ஆண்டின் இறுதியில் மனிதர்களுக்குச் செய்யப்படவிருக்கிறது. இன்னும் இரண்டே ஆண்டுகளில் இந்த நவீன சொட்டு மருந்து, சந்தையில் விற்பனைக்கு வந்துவிடும் என்கிறார்கள்.

`பார்வைக் கோளாறுகளைச்  சரிசெய்வதற்காக  இருக்கும் நவீன சிகிச்சை முறைகள் என்னென்ன, இந்தக் கண்டுபிடிப்பு அவற்றுக்கு எந்த வகையில் உதவும்?’ – கண் மருத்துவர் திரிவேணி வெங்கடேஷிடம் கேட்டோம்.

“பார்வைக் குறைபாட்டில் கிட்டப்பார்வை (மையோபியா (Myopia) – மைனஸ் பவர்) அல்லது தூரப்பார்வை (ஹைபரோபியா (Hyperopia) – ப்ளஸ் பவர்) ஏற்படுகிறது. இது தவிர `அஸ்டிக்மாடிஸம்’ (Astigmatism) பாதிப்பும் ஏற்படலாம். இந்தக்  குறைபாடுகளுக்கு கண்ணாடிகளோ, கான்டாக்ட் லென்ஸுகளோ அணியலாம்; சின்னதாக  லேசர் சிகிச்சையும் செய்துகொள்ளலாம்.  இதுதான் இதுவரை நடைமுறையாக இருக்கிறது.

பார்வை கோளாறு

வருடத்துக்கு ஒருமுறை கண்களைப் பரிசோதித்து புதுக் கண்ணாடி மாற்றிக்கொண்டே இருக்க ஆகும் செலவைவிட, ஒரு முறை செய்யும் லேசர் சிகிச்சைக்கு ஆகும் செலவு குறைவு. அதனால் பெரும்பாலானோர் லேசர் சிகிச்சையையும் தேர்ந்தெடுக்கிறார்கள்.

பார்வைக் குறைபாட்டை நீக்க நவீன முன்னேற்றமாக லேசர் சிகிச்சை இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக லாசிக் (Lasik) லேசர் சிகிச்சையும் புழக்கத்தில் இருக்கிறது. கார்னியா (Cornea) என்னும் விழி வெண்படலத்தில் லேசர் மூலம் திசு அகற்றப்பட்டு பார்வைக் கோளாறு சரி செய்யப்படுகிறது. இருந்தாலும், விழி வெண்படலம் (கார்னியா) மெலிதாக இருந்தால் லாசிக் லேசர் சிகிச்சையைச் செய்ய முடியாது. காயம் ஆறுவதற்கும்  சிறிது காலமாகும். ஆனால் `ஸ்மைல்’ (Small Incision Lenticule Extraction) கருவி சிகிச்சையில், 2 மி.மீ அளவுக்கு மட்டுமே துளையிடப்பட்டு, லேசர் மூலம் விழி வெண்படல திசு அகற்றப்படுகிறது. விழி வெண்படலம் மெலிதாக இருந்தாலும், `ஸ்மைல்’ சிகிச்சை முறை மூலம் சரிசெய்ய முடியும். குறிப்பாக ஒரு கண்ணில் மட்டும் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு `ஸ்மைல்’ சிகிச்சை சிறந்தது. 10 நிமிடங்களில் இந்த முறையில் பிரச்னைக்குத் தீர்வு காணலாம்.

புதிய கண்டுபிடிப்பான ‘நானோ டிராப்ஸ்’ கிகிச்சையில், சொட்டு மருந்து மட்டுமே போதும் என்று சொல்லியிருக்கிறார்கள். இது சாத்தியமானால், கண் கோளாறுகளால் பாதிக்கப்படுபவர்களுக்கு கிடைத்திருக்கும் வரப்பிரசாதம். அதே நேரத்தில், எவ்வளவு டிராப்ஸ் விட வேண்டும். சொட்டுகள்விடுவது கண்களின் பவர்க்கேற்ப மாறுபடுமா, பக்க விளைவுகள் உண்டா, இது எத்தனை நாளைக்குப் பயன் தரும், எந்த நிலை வரை பாதிப்பு உள்ளவர்களுக்கு அது பலனளிக்கும்… என்பதெல்லாம் தெளிவாகச் சொல்லப்படவில்லை. அதேபோல மருத்துவரின் ஆலோசனையில்லாமல், இப்படி தாங்களாகவே சிகிச்சை செய்துகொள்வது சுயமருத்துவத்துக்கு ஒப்பானது. இது குறித்த ஆராய்ச்சிகள் இன்னும் நிறைவடையவில்லை. நடைபெற்றுவருகிறது. முடிந்த பின்னர்தான்  சரியான ஒரு முடிவுக்கு வர முடியும்” என்கிறார் கண் மருத்துவர் திரிவேணி வெங்கடேஷ்.

 

நன்றி : செந்தில்வயல்.காம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.