செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் தூக்கனாங்குருவிக் கூடு! | சிறுகதை | பொன் குலேந்திரன்

தூக்கனாங்குருவிக் கூடு! | சிறுகதை | பொன் குலேந்திரன்

4 minutes read

நான் காதலித்து திருமணம் செய்த  என்  கணவர் ரமணன் ஒரு   கட்டிடக் கலைஞர். அவரை நான் முதலில் சந்தித்தது  நான் வேலை செய்யும் நிறுவனத்தின் மீட்டிங் ஒன்றில். எனக்கு அப்போது வயது இருபத்தியோன்று. என் பெற்றோருக்கு நான் ஒரே மகள் அதனால் எனக்கு அவ்வளவு கட்டுப்பாடு இருக்கவில்லை.

நான் ஆங்கிலத்தில்  எம் ஏ செய்து முடித்த பின் எனக்கு வேலை கிடைத்தது. ஒரு அமெரிக்க பல மாடிக் கட்டிடங்கள் உருவாக்கும் மல்கம் கட்டிட நிறுவனத்தில். அந்த நிறுவனத்தில் சுமார் 200 பேர் வேலை செய்தார்கள். அதில் பத்து பேர்  கட்டிடப் பொறியாளர்களும், ரமணன் என்ற கட்டிடக் கலைஞரும்  வேலை  செய்தார்கள்.  அதன் உரிமையாளர்  மல்கம்  என்ற அமெரிக்கர். மல்கத்தின் பேர்சனல் செக்கர்டரியாக நல்ல சம்பளத்தில், சலுகைகளோடு எனக்கு வேலை கிடைத்தது என் அதிர்ஷ்டம். அடிக்கடி வேலை விசயமாக   ரமணனை  நான் சந்தித்த போது அவரின் அமைதியான போக்கும், புத்திசாலித்தனமும், சிரித்த முகமும் என்னைக் கவர்ந்தது. அதிகம் பேச மாட்டார்.

அடிக்கடி எங்களிடையே வேலை விசயமாக ஏற்பட்ட சந்திப்புகள் எங்களின் காதலுக்கு வித்திட்டது. என் முடிவை என் பெற்றோருக்கு சொன்ன போது என் அம்மா சொன்ன பதில் எனக்குப் புதிராக இருந்தது.

“வசந்தி நான் உன் ஜாதகத்தை பிரபல ஜோதிடர் ஒருவரிடம்   காட்டினேன். அவர் அதைப் பார்த்து விட்டு சொன்னார் உன் ஜாதகத்தில் செவ்வாய் குற்றம் இல்லை என்று. ஆனால் உன் ஜாதகத்தில் ஐந்தாம் வீட்டை பாவக் கிரகங்கள்  பார்ப்பதால் குழந்தை பாக்கியம் உனக்கு மிகக் குறைவாம் . அதற்கு ஈடுகொடுக்கும் ஆண் ஜாதகம் உள்ள ஒருவனைத் தேடி காதலித்து  நீ திருமணம் செய்தால் சந்தான தோஷம்  நீங்கலாம். நீ விரும்பும் ரமணன் என்பவரின் ஜாதத்தை வாங்கி வா பொருத்தம் பார்ப்போம் பொருந்தினால் எங்களுக்கு உன் திருமணத்துக்கு ஆட்சேபனை இல்லை.”

“அம்மா இந்த காலத்தில் ஜாதகம் பார்த்து திருமணம் செய்பவர்கள் மிகக் குறைவு. அதோடு எனக்கு அதில் நம்பிக்கை இல்லை. எங்கள் இருவரின் மனங்களும் பொருந்தி விட்டது . அதுவே நல்ல பொருத்தம் என் விருப்பப்படி  ரமணனை திருமணம் செய்ய  விடுங்கள். அவருக்குப் பெற்றோர் இல்லை. சீதனம் ஒன்றும் அவர் கேட்கப் போவதில்லை. நல்ல உத்தியோகம். நல்ல சம்பளம். நல்ல மனிதர். நல்ல குணம் அவருக்கு”

என் அப்பா என் அம்மா சொன்ன கோட்டைத்   தாண்ட மாட்டார்  என்று எனக்குத் தெரியும்.

என் பெற்றோரின் ஒப்புதலை  எதிர்பார்க்காமல் நான் முடிவு எடுத்தேன். அவர்கள் இருவரும்வேண்டா வேறுப்பாக என் திருமணத்துக்கு கோவிலுக்கு வந்தார்கள். எனக்கு திருமணம்  ஆகும் போது எனக்கு வயது இருபத்தைந்து.

திருமணத்துக்குப் பின் நானும், ரமணனும் தனிக் குடித்தனம் போனோம். எங்கள் இருவருக்கும் ஒரு காரும், டூ வீலரும்   இருந்த படியால் நகரத்தின் ஒதுக்குப் புறத்தில் மூன்று அறை உள்ள ஒரு பங்களாவை பின் வளவில் ஒரு தோட்டத்தோடு  வாடகைக்கு எடுத்து வாழ்ந்தோம். சமையலுக்கும் வீட்டை சுத்தமாக  வைக்க ராஜம்மா  என்ற ஐம்பது வயது விதவை இருந்தாள்.

எங்கள் இருவருக்கும் திருமணமாகி முதல் ஐந்து வருடங்கள் குழந்தை பாக்கியம் கிட்டவிலை. எங்கள் தாம்பத்திய உறவில்  இருவருக்கும் பூரண திருப்தி. அப்படி இருந்தும் எங்களுக்கு  குழந்தை கிடைக்கவில்லை.

அன்று எங்கள் இருவருக்கும் விடுமுறை. வீட்டு  தோட்டத்தில் இருந்து இருவரும்  இயற்கையை ரசித்துக் கொண்டு இருந்தோம். தோட்டத்தில் உள்ள ஒரு மரத்தில் தொங்கிய தூக்கனாங்குருவிக் கூடு

என் கவனத்தை  ஈர்ந்தது. ஒரு குருவி தன் இரு  குஞ்சுகளுக்கு இரை ஊட்டும் காட்சி என் சிந்தனையைத் உசிப்பி விட்டது. அந்தக் கூடு காற்றில் ஆடியபோது  தொட்டில் ஆடுவது போல் எனக்கு தோன்றியது. என்ன அழகான கூட்டின் அமைப்பு. இதை ஒரு உதவியும் இன்றி கட்ட இந்தக் குருவி ஜோடிகளுக்கு எவ்வளவு காலம் எடுத்திருக்கும்.  அந்த குருவிகள் இரண்டும்  தங்கள்  குஞ்சுகளுக்கு அன்புடன் உணவு கொடுக்கும் காட்சியை ரமணனுக்கு காட்டி நான் ரசித்தேன்.

“இப்படி எப்போ நாம் இருவரும் எங்கள் குழந்தைகளுக்கு உணவு ஊட்டி மகிழ்வோம்”  என்றது என் மனம். என் சிந்தனையில் அம்மா சொன்னது உண்மையாக இருக்குமோ என யோசித்தேன்.  அப்போது தோட்டத்தில் இருந்த சிறு தண்ணீர் தொட்டியில் தண்ணீர் குடிக்க இரண்டு சிட்டுக் குருவிகள் தங்களின் குடும்பத்தோடு  பறந்து வந்து, நீரில் மூழ்கி குளித்த காட்சியும் என்னை கவர்ந்தது.  மரத்தில் தொங்கிய தூக்கணாங் குருவிக்கூட்டின் அமைப்பு என்னை பிரமிக்க வைத்தது.  ரமணனுக்கு அதை சுட்டிக்  காட்டினேன்.

“ரமணா உமக்கு  கட்டிட்டக் கலையை  படித்து பட்டம் பெற நான்கு வருஷங்கள்  எடுத்தது. இந்தக் குருவிக்கு இந்த அழகிய கூட்டை தன் குடும்பத்தோடு கட்டி வாழும் கலையை  கற்றுக் கொடுத்தது யார்?”

“வசந்தி இது இயற்கை அன்னை அவர்களுக்கு  சொல்லிக் கொடுத்த கலை. ஒவ்வொரு பறவையும் வித்தியயாசமாக தமக்குத் தெரிந்த முறையில் கூடு கட்டும். குயில் போன்ற பறவைக்கு கூடு கட்டத் தெரியாது. காகம் கஷ்டப் பட்டு கட்டிய கூட்டில் களவாகப் போய் முட்டை இடும். பலவித    குருவிக் கூடுகளையும், தேன் கூட்டையும்  பார்த்து நாம் எமது கட்டிடக் கலையை கற்றோம்.

“அதோ பாருங்கள் ரமணன் அந்த தூக்கனாங்குருவிக் கூட்டை. அதை பார்க்க எனக்கு பொறாமையாக இருக்கு. குருவி தான் பிடித்த புழுக்களைக் கொண்டு வந்து தன் குஞ்சுகளுக்கு ஊட்டும் அழகை. இதற்கு முன் இந்த குருவி இரண்டு தடவை குஞ்சு பொரித்து அவை வளர்ந்து பறந்து போயிற்று. இது இரண்டாம் பிரசவம். இந்த குருவியின் குடும்பம் பெருகிறது. எவ்வளவு அழகான காட்சி  பார்ப்பதற்கு. ம்.. ம் கொடுத்து வைக்க வேண்டும் என்று பெருமுச்சு விட்டாள் வசந்தி.

“ஏன் இந்த பெருமுச்சு வசந்தி?”

“இல்லை ரமணன்  எங்களுக்கு திருமணமாகி சுமார் ஐந்து வருடங்களாகி விட்டது. என் வயிற்றில் ஒரு குழந்தையும் வளரவில்லை. ஊரில் மலடி என்ற பெயர் மட்டும் எனக்கு காத்துக் கொண்டு இருக்குது.  என் அம்மா என் ஜாதகம் பார்த்து சொன்னது உண்மையாக  இருக்குமோ?”

“என்ன விசர் கதை பேசுகிறீர்?  உமக்கு குழந்தைகள் அவசியம் வேண்டும் என்றால் என் நண்பர் டாக்டர் முரளியிடம்  போய் ஆலோசனை கேட்போம். இந்த காலத்தில் குழந்தை இல்லாதவர்களின்   கவலையை  தீர்க்க பல வழிகள் உண்டு.

– பொன் குலேந்திரன் – கனடா

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.