அஜித்தை வைத்து ‘வீரம்’, ‘வேதாளம்’, ’விவேகம்’, ‘விஸ்வாசம்’ என தொடர்ந்து நான்கு படங்களை இயக்கிய சிவா, தற்போது சூர்யாவை வைத்து படம் இயக்கும் வேலையில் இருக்கிறார். பயங்கர பிஸியாக வேலை பார்த்துக்கொண்டிருந்தவரிடம் சில நிமிடங்கள் பேசினோம்.
சிறுத்தை சிவா
இயக்குநர் சிவா குறிப்பு வரைக?
’’சென்னை சாலிகிராமத்தில் இருந்த அருணாசலம் ஸ்டூடியோவில்தான் நான் பிறந்தேன். என் தாத்தா ஏ.கே.வேலன்தான், ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ படத்தை தயாரித்து இயக்கியவர். அப்பா ஜெயக்குமார் 300-க்கும் மேற்பட்ட டாக்குமென்டரி திரைப்படங்களை இயக்கி, நிறைய படங்களுக்கு விருதுகள் வாங்கி இருக்கிறார். சகோதரர் பாலா தமிழ் சினிமாக்களில் நடித்தவர், இப்போது மலையாள படங்களில் செம பிஸியாக இருக்கிறார். சின்ன வயசில் இருந்தே டைரக்ஷன் மேல் ரொம்ப ஆசை 12-ம் வகுப்பு படித்து முடித்த பிறகு, நிறைய காலேஜில் சேர்வதற்கு வாய்ப்பு வந்தது. எல்லாத்தையும் நிராகரித்துவிட்டு திரைப்பட கல்லூரியில் ஒளிப்பதிவாளர் துறையில் சேர்ந்தேன். முதலில் மலையாள படத்தில் வேலை பார்த்தேன். அப்புறம் நாகார்ஜுனா நடித்த தெலுங்குப் படத்தில் வேலை செய்தபோது என்னைப் பார்த்த அவர், தனக்கொரு கதையை ரெடிசெய்யச் சொன்னார். அதன் பிறகு, அவரால் நடிக்க முடியாத அந்தக் கதையில் கோபிசந்த் நடித்தார். இப்படித்தான் என் இயக்குநர் பயணம் ஆரம்பமானது.’’
திரைப்படக் கல்லூரியில் படித்த அனுபவம்?
‘’நான் 1995-ல் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் படித்தேன். அப்போது சக மாணவர்கள் தவிர சீனியர்களும் என்னோடு நெருக்கமாகப் பழகினர். என்னுடைய எல்லா படங்களிலும் கேமராமேனாக இருந்துவரும் வெற்றி, என்னோட பெஞ்ச்மேட், சவுண்டு என்ஜினீயர் உதய், சதீஷ் எல்லோரும் என் சக தோழர்கள். ஒருமுறை ‘வாலி’ படத்தில் அஜித்சார் நடிக்கும் ஒரு காட்சியை படமாக்கிக்கொண்டு இருந்தார் எஸ்.ஜே.சூர்யா. அந்தச் சமயம் நானும் வெற்றியும் வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றோம். அதைப் பார்த்துவிட்டு திரும்பும்போது, ‘டேய் வெற்றி, நான் அஜித்சாரை டைரக்ஷன் செய்வேனாடா…’ என்று கேட்டேன். அப்போது ,’நிச்சயமா… உன்னோட டைரக்ஷன்ல அஜித் நடிப்பார்’ என்று அன்று சொன்னது நினைவில் இருக்கிறது. இதோ இப்போது ‘வீரம்’, ‘வேதாளம்’, ’விவேகம்’, ‘விஸ்வாசம்’ என்று தொடர்ந்து அஜித்சாரின் நான்கு படங்களுக்கு நான்தான் டைரக்டர், வெற்றிதான் ஒளிப்பதிவாளர்.’’
அஜித்துடன் உங்களது சினிமா பயணம் எப்படி?
“அவரோடு நான் நான்கு படங்கள் செய்தது இறைவன் கொடுத்த பாக்யம் என்றே சொல்வேன். ‘வீரம்’ படத்தில் இடம்பெற்ற பிரமிப்பான ரயில் சண்டைக் காட்சியை படமாக்கியதை என்னால் மறக்க முடியாது. அதுபோலவேதான் ‘விவேகம்’ படத்தில் உள்ள பைக் ஃபைட் காட்சியும். ‘விஸ்வாசம்’ படத்தில் ‘அடிச்சுத் தூக்கு…’ பாடல் காட்சி படமாக்கியபோது எனக்குப் பிறந்தநாள் வந்தது. அஜித்சார் ஆடும் நீளமான டான்ஸ் காட்சியைத் துண்டு துண்டாக எடுக்க திட்டமிட்டிருந்தேன். அன்றைய ஷூட்டிங் ஸ்பாட்டில் நீளமான டான்ஸ் மூவ்மென்ட்டை ஒரே டேக்கில் ஓ.கே செய்த அஜித்சார், ‘சிவாவுக்கு என்னோட பர்த்டே கிஃப்ட்’ என்று சொல்லி நெகிழவைத்தார். ‘வீரம்’ படத்தில் இருவரும் வேலை பார்த்தபோதே, ‘சிவா நாம ரெண்டு பேரும் சேர்ந்து நிறைய படங்கள் ஒர்க் பண்ணுவோம்’ என்று சொன்னார். அதுபோல ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பு முடியும் முன்னரே அடுத்தடுத்த படங்களில் சேர்ந்து பணியாற்ற முடிவுசெய்தோம். ஒரு படத்தின் சக்ஸஸ் குறித்து நாங்கள் பேசுவதே இல்லை. எங்களுக்குள் இருந்த மியூச்சுவல் ரெஸ்பெக்ட்தான் எங்களை சேர்த்து பயணிக்க வைத்து இருக்கிறது. அஜித்சாரின் தொழில்பக்தியை நான் ரொம்ப ரொம்ப மதிப்பேன் அதுபோல ஷூட்டிங் ஸ்பாட்டில் நான் சின்சியாரிட்டியாக வேலை பார்ப்பதை அவரும் விரும்பிப் பார்ப்பார். இந்தப் புரிதல்தான் இருவருக்குமான தொடர்ந்து நான்கு படங்களுக்கான சந்தோஷமான பயணம்.’’
விஜய் படத்தை ஏன் டைரக்ஷன் செய்யவில்லை?
’எங்கள் இருவருக்குமே சென்னை சாலிகிராமம் சொந்த ஏரியா என்பதால் என் அப்பா ஜெயக்குமாரும் விஜய்சார் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரும் நல்ல நண்பர்கள். எனக்கும் விஜய்சாருக்கும் காமன் ஃப்ரெண்ட்ஸ் நிறைய பேர் உண்டு. ‘ பத்ரி’ படத்தில் ஆபரேட்டிவ் கேமராமேனாக வேலைபார்த்தபோது விஜய்சார் நல்ல பழக்கமானார். அந்தப் படத்தில் இடம்பெற்ற முக்கியமான காட்சிகளை குறிப்பாக க்ளைமாக்ஸ் காட்சியை நான்தான் படம்பிடித்தேன். விரைவில் விஜய்சார் நடிக்கும் படத்தை இயக்குவேன்.’’
நிஜத்தில் சிவா ரொம்ப சாஃப்ட், படத்தில் பயங்கர அதிரடி எப்படி?
’’சின்ன வயசில் இருந்தே ஆக்ஷன் படங்களை விரும்பிப் பார்ப்பேன். இப்போகூட நிறைய ஆக்ஷன் படங்களையே பார்க்கிறேன். குடும்பம், சென்டிமென்ட் காட்சிகளுக்கு எப்படி கஷ்டப்பட்டு ஸ்கிரிப்ட் எழுதுகிறேனோ அதுபோலவே சண்டைக்காட்சிகளுக்கும் மெனக்கெட்டு ஸ்கிரிப்ட் எழுதுவேன்.’’
அடுத்து இயக்கப்போகும் சூர்யா படம் குறித்து?
“கார்த்தி நடித்த ‘சிறுத்தை’ படம் முடிந்த பிறகே சூர்யாசார் நடிக்கும் படத்தை இயக்க வேண்டியது. தள்ளிதள்ளிப்போய் இப்போது வந்திருக்கிறது. அடுத்த மாதம் ஷூட்டிங் செல்கிறோம்.’’
ரஜினியை சந்தித்த அனுபவம்?
“நான் ரஜினிசாரின் தீவிர ரசிகன். நேரில் பார்த்தபோது ‘விஸ்வாசம்’ படம்குறித்து மனம் திறந்து பாராட்டியதை மறக்க முடியாது.’’
நேர்காணல் – எம். குணா. நன்றி – விகடன்