கேரளாவின் உலகப் புகழ்பெற்ற குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணர் கோவிலில் எதிர்வரும் ஓகஸ்ட் 23ஆம் திகதி இதுவரை இல்லாத அளவுக்கு அதிக எண்ணிக்கையிலான திருமணங்கள் நடைபெற உள்ளன. ஒரே நாளில் இதுவரை 377 திருமணங்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், முன்பதிவு தொடர்ந்து நடைபெற்று வருவதால் இந்த எண்ணிக்கை 400-ஐ தாண்டக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குருவாயூர் கோவிலில் திருமணம் செய்வது கேரளா மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்களிடமும் சிறப்பு முக்கியத்துவம் பெற்றதாகக் கருதப்படுகிறது. குருவாயூரப்பன் சன்னிதியில் திருமணம் செய்துகொள்வது தம்பதிகளுக்கு நல்ல அதிர்ஷ்டத்தையும் வளமான வாழ்க்கையையும் தரும் என்ற நம்பிக்கை பலரிடமும் காணப்படுகிறது.
ஓகஸ்ட் 23 ஏன் முக்கியமான நாள்?
கேரளாவின் புதிய மலையாள மாதமான சிங்கம் தொடங்கிய பின்னர் வரும் முதல் ஞாயிற்றுக்கிழமை ஓகஸ்ட் 23ஆம் திகதி வருகிறது. இந்த நாள் திருமணத்துக்கு மிகவும் உகந்த சுபமுகூர்த்த நாளாக கருதப்படுவதால், ஏராளமான தம்பதிகள் இந்த நாளைத் தேர்வு செய்துள்ளனர்.
இதன் காரணமாக குருவாயூர் கோவிலில் திருமண முன்பதிவுகள் அதிகரித்துள்ளன. தற்போது ஓகஸ்ட் 23ஆம் திகதி மட்டும் 377 திருமணங்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.
அதேபோல், அடுத்ததாக வரும் ஓகஸ்ட் 30ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் திருமணங்களுக்கு அதிக வரவேற்பு காணப்படுகிறது. அந்த நாளுக்காக ஏற்கனவே 295 திருமணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன.
அதிகாலை 4 மணிக்கே திருமணங்கள் ஆரம்பம்
ஒரே நாளில் நூற்றுக்கணக்கான திருமணங்கள் நடைபெற உள்ளதால், திருமணச் சடங்குகளை வழக்கமான நேரத்தைவிட முன்னதாகவே தொடங்க குருவாயூர் தேவஸ்வம் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
ஓகஸ்ட் 23 மற்றும் 30 ஆகிய இரு நாட்களிலும் திருமணச் சடங்குகள் அதிகாலை 4 மணிக்கே தொடங்க உள்ளன. இதன்மூலம் அனைத்து திருமணங்களையும் திட்டமிட்ட நேரத்திற்குள் நடத்தி முடிப்பதுடன், பக்தர்களின் தரிசனத்திற்கும் இடையூறு ஏற்படாமல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆறு திருமண மண்டபங்களில் ஏற்பாடுகள்
திருமணங்கள் தடையின்றி நடைபெறுவதற்காக கோவில் வளாகத்தில் உள்ள ஆறு திருமண மண்டபங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
மேலும், அதிகமான பக்தர்கள் மற்றும் திருமணத்திற்கு வரும் குடும்பத்தினரைக் கருத்தில் கொண்டு கூடுதல் கோவில் பணியாளர்கள், பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் மங்களவாத்தியக் குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
கோவில் வளாகத்தில் கூட்ட நெரிசல் ஏற்படாமல் இருக்கவும், திருமணச் சடங்குகள் மற்றும் பக்தர்களின் தரிசனம் ஆகிய இரண்டும் சீராக நடைபெறவும் தேவஸ்வம் நிர்வாகம் விரிவான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.
திருமணத்திற்கு 24 பேருக்கு மட்டுமே அனுமதி
அதிக எண்ணிக்கையிலான திருமணங்கள் நடைபெறுவதால் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் சில கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
திருமண மண்டபத்துக்கு அருகில் மணமகன், மணமகள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் புகைப்படக் கலைஞர்கள் உள்ளிட்ட மொத்தம் 24 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்டுப்பாட்டின் மூலம் திருமணச் சடங்குகள் தாமதமின்றி நடைபெறுவதோடு, கோவிலுக்கு வரும் ஏனைய பக்தர்களும் சிரமமின்றி தரிசனம் செய்ய முடியும் என தேவஸ்வம் நிர்வாகம் எதிர்பார்க்கிறது.
கடந்த சாதனை முறியடிப்பு
குருவாயூர் கோவிலில் ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான திருமணங்கள் நடைபெற்ற சாதனை கடந்த 2025ஆம் ஆண்டு செப்டம்பர் 8ஆம் திகதி பதிவாகியிருந்தது. அன்றைய தினம் மொத்தம் 334 திருமணங்கள் நடைபெற்றிருந்தன.
ஆனால், தற்போது ஆகஸ்ட் 23ஆம் திகதிக்காக ஏற்கெனவே 377 திருமணங்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதால், கடந்த ஆண்டு பதிவான சாதனை ஏற்கனவே முறியடிக்கப்பட்டுள்ளது.
மேலும் முன்பதிவு தொடர்ந்து நடைபெற்று வருவதால், திருமணங்களின் எண்ணிக்கை 400-ஐ கடந்துவிடுமா என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.
ஒரே நாளில் இவ்வளவு அதிகமான திருமணங்கள் நடைபெறுவது குருவாயூர் கோவிலின் திருமண வரலாற்றில் முக்கியமான நிகழ்வாக அமைய உள்ளது.
பக்தர்கள் மற்றும் திருமணத்துக்கு வரும் குடும்பத்தினர் தேவஸ்வம் நிர்வாகம் அறிவித்துள்ள விதிமுறைகளைப் பின்பற்றி ஒத்துழைக்க வேண்டும் என தேவஸ்வம் போர்டு தலைவர் ஏ.வி. கோபிநாத் கேட்டுக்கொண்டுள்ளார். கோவில் தரிசனம் மற்றும் திருமணச் சடங்குகள் இரண்டும் சுமூகமாக நடைபெறுவதற்கு அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.