பிரபல நடிகை விஜயலட்சுமி தனது மருத்துவ செலவிற்கு கையில் ஆயிரம் ரூபாய் கூட இல்லாமல் இருப்பதாக கூறி வீடியோ மூலம் உதவி கேட்டுள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு விஜயலட்சுமி பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியுள்ளது. அதில் அவர் கூறியிருப்பது, “நான் நடிகை விஜயலட்சுமி. ஃப்ரண்ட்ஸ் படத்தில் நடித்துள்ளேன். தற்போது பெங்களூரில் இருந்து இந்த வீடியோவை வெளியிடுகிறேன். 6 மாதத்துக்கு முன்பு உடல் நலக்குறைவால் நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் குறைந்ததால் வாய்ப்புத்தேடி பெங்களூரு வந்தேன். இங்கு வந்து 2 படங்களில் நடித்தேன்.
உடல் நலக் குறைவால் கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை. அதனால் தொடர்ந்து படங்களில் நடிக்க வாய்ப்பு தேடினேன். ஷூட்டிங் நடக்கும் இடத்தில் பலரும் என்னுடைய பேச்சில் தமிழ் கலந்த்திருப்பதை கூறி கேலி செய்தனர். எனது உடல்நிலை மோசமடைந்து கொண்டே சென்றது. இவர்களிடம் இருந்து எண்ணை காப்பாற்றுங்கள். நான் மீண்டும் சென்னைக்கு வர விரும்புகிறேன். ரஜினி சார் எனக்கு உதவுங்கள்” என்று பேசியிருந்தார்.
அதன் பிறகு விஜயலட்சுமி மற்றொரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார். “ரஜினிகாந்த் என்னை போனில் தொடர்பு கொண்டார். எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. பொறுமையாக எனது பிரச்சினைகளை காது கொடுத்து கேட்டார். எனக்கு நம்பிக்கை அளிக்கும் விதத்தில் பேசினார். ரஜினி சார் ஒரு நல்ல மனிதர். எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார். அவருடைய எண்ணத்தை நான் மதிக்கிறேன். தற்போது அவர்மீதுள்ள மரியாதை நூறு மடங்கு அதிகரித்துள்ளது.
இப்படி ஒரு நல்ல மனிதர்தான் நமக்கு தலைவராக வர வேண்டும். என்னுடைய கஷ்டங்களை கேட்டு எனக்கு உதவி செய்தார். அவர் எந்த செயல் செய்தாலும் அதில் வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கிறேன். ஒரு தலைவனுக்கு இருக்க வேண்டிய குணாதிசியம் அவரிடம் அதிகமாகவே இருக்கிறது.” என்று நெகிழ்ச்சியாக பேசியிருந்தார்.
தற்போது விஜயலக்ஷ்மி மீண்டும் ஒரு வீடியோவில் சீமானிடம் உதவி கேட்டுள்ளார். “எனக்கு எந்த தமிழ் நடிகரும் உதவ முன்வரவில்லை, மருத்துவ செலவுக்கு கையில் 1000 ருபாய் கூட இல்லாமல் அவதிப்படுகிறேன்” என்று கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். ஏற்கனவே ரஜினி உதவியதாக கூறியவர் இப்போது கையில் பணமில்லை என இந்த வீடியோ வெளியிட்டிருப்பது தற்போது சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.