செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் விடுதலைப் புலிகளுக்கு எதிரான கருத்தை சுமந்திரன் மீளப்பெற வேண்டும்: சிவசக்தி ஆனந்தன்

விடுதலைப் புலிகளுக்கு எதிரான கருத்தை சுமந்திரன் மீளப்பெற வேண்டும்: சிவசக்தி ஆனந்தன்

2 minutes read

தமிழீழ விடுதலைப் புலிகள் குறித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பொதுவெளியில் தெரிவித்த கருத்தை மீளப்பெற வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்,  “தமிழ் இன விடுதலைக்காக ஆயுதம் ஏந்திய அத்தனை இயக்கங்களும் தமது உயிர்களைத் துச்சமென மதித்து போராட்டக்களம் புகுந்திருந்தனர்.

கால மாற்றங்களுக்கேற்ப ஆயுத இயக்கங்கள் ஆயுதப் போராட்ட வழியிலான தமது பயணங்களை மாற்றியமைத்துக் கொண்டன. இந்தப் பின்னணியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இறுதி வரையில் விடுதலைக்கான ஒரே வழியாக ஆயுதப் போராட்டத்தையே முன்னிலைப்படுத்தினர்.

இது வரலாறாக இருக்க, ஆயுதப் போராட்டத்தில் பங்கேற்று ஜனநாயக வழி வந்த அமைப்புக்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒருங்கிணைப்பில் 2001ஆம் ஆண்டு தமிழின விடுதலைக்கான அரசியல் ரீதியான நகர்வினை ஆரம்பித்திருந்தன.

கடந்த கால கசப்புணர்வுகள் அனைத்தையும் மறந்து தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட ஏனைய விடுதலை இயக்கங்கள் கரம் கோர்த்து ஒன்றாகச் செயற்பட்டனர். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான கருத்துக்களால் ஆயுதப் போராட்டத்திற்கு வந்த இயக்கங்கள் மத்தியிலும் பொது மக்கள் மத்தியிலும் பழைய கசப்பான சம்பவங்களைக் கிளறி விரிசல்களை சுமந்திரன் ஏற்படுத்தப் பார்க்கின்றார்.

இவ்வாறிருக்க விடுதலைப் புலிகளுக்கு எதிரான மனோநிலையையும் கொள்கை ரீதியான முரண்பாடுகளையும் கொண்டிருக்கும் சுமந்திரன் போர்ச்சூழல், நெருக்கடியான நிலைமைகள் அனைத்தும் நிறைவுக்கு வந்த பின்னரே அரசியலில் பிரவேசித்தார்.

ஆகவே, விடுதலைப் போராட்டத்தில் வித்தாகியவர்களின் அர்ப்பணிப்பை இவர் உணர்ந்திருப்பதற்கு எந்த விதமாக வாய்ப்புக்களும் இல்லை. விடுதலைப் புலிகளுக்கு எதிரான தனது தனிப்பட்ட கருத்தியலை பொதுவெளியில் வெளிப்படுத்தி ஒட்டுமொத்த விடுதலை இயக்கங்களையும் அவமதித்துள்ளார்.

அது மட்டுமன்றி கடந்த கால கசப்பான விடயங்களை மீட்டு உயிர்த் தியாகங்களைச் செய்த விடுதலை இயக்க உறுப்பினர்களை கொச்சைப்படுத்தியுள்ளதுடன் சாதாரண பிரஜைகளாக சமூகத்தில் வாழும் அனைத்துப் போராளிகளுக்கும் மனக் கவலையை உருவாக்கியுள்ளார்.

ஆயுத விடுதலைப் போராட்டம் சம்பந்தமாக எந்தவொரு கருத்தையும் வெளிப்படுத்துவதற்கு அருகதையற்ற இவர் விடுதலை இயக்கங்களை விமர்சிப்பதானது பௌத்த சிங்கள மேலாதிக்க தரப்புக்களின் கரங்களை பலப்படுத்தும் மறைமுக நிகழ்ச்சி நிரலை வலுப்படுத்தும் செயற்பாடாகவே கருத வேண்டியுள்ளது.

ஆயுதப் போராட்டத்துக்கு பிள்ளையார் சுழி போட்ட இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர்களின் செயற்பாடுகளை அக்கட்சியின் கத்துக்குட்டியாக இருக்கும் சுமந்திரன் போன்றவர்கள் உணர்ந்து கொள்ளவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More