செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமாகவர் ஸ்டோரி ஓவியனாக இந்தியாவில் பிறக்கக் கூடாது | நடிகர் சிவகுமார் பேச்சு

ஓவியனாக இந்தியாவில் பிறக்கக் கூடாது | நடிகர் சிவகுமார் பேச்சு

3 minutes read

அஞ்சல் தலை சேகரிப்பை ஒரு தவமாகவே செய்து வந்த சிறுவர்கள் 1990கள் வரைக்கும்கூட இருந்தார்கள். ஒரு கடிதம் கொண்டு வரப்படும் சேவைக்கான செலவைக் குறிப்பதுதான் அஞ்சல் தலையின் நோக்கம் எனினும், வரலாறு, பண்பாடு ஆகிய தளங்களிலும் அது கவனிக்கத்தகுந்த சில செய்திகளைக் கொண்டுள்ளது. தகவல் தொடர்புத் துறை பல வகை மாற்றங்களைக் கண்டாலும், இந்திய அஞ்சல் துறையும் அதற்கு ஒத்திசைந்து தன் சேவைகளைத் தொடர்ந்து வருகிறது.

கடிதங்களுக்கும் அஞ்சல் தலைகளுக்குமான உறவிலும் மாற்றம் இல்லை. அஞ்சல் தலையை முன்னிறுத்தி இந்தத் துறையின் 70 ஆண்டு காலப் பயணம் குறித்த தகவல்களை மக்களோடு பகிர்ந்துகொள்ளும் நோக்கத்துடன் ‘அஞ்சல்தலை கண்காட்சி’ ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. அந்த வகையில் சென்னை ஷெனாய் நகரில் நடைபெற்று வரும் ‘TANAPEX-14வது மாநில அளவிலான அஞ்சல்தலை கண்காட்சி’யும் பார்வையாளர்களுக்கு சுவாரஸ்யமான நிகழ்வாக அமைந்துள்ளது. தமிழ்நாடு அஞ்சல் வட்டம் இந்நிகழ்வை நடத்துகிறது.

முதல் நாள் நிகழ்ச்சிகள்: ஜனவரி 29, 2025 அன்று தொடங்கிய இக்கண்காட்சி 4 நாள் நிகழ்வாகும். பழைமை வாய்ந்த அஞ்சல் தலைகளைக் காட்சிப்படுத்துவதோடு, இந்திய அளவில் முக்கியமான அஞ்சல் தலை சேகரிப்பாளர்கள், நாணயச் சேகரிப்பாளர்களின் அரங்குகளையும் கொண்டுள்ளது.தமிழக அரசின் தலைமைச் செயலாளர் என். முருகானந்தம் ஐ.ஏ.எஸ் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார். முதல் நாள் நிகழ்வில் நடிகரும் ஓவியருமான சிவகுமார் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். எழுத்தோவிய(காலிகிராபி) கலைஞரான கே. ஜெயபிரீதி, அஞ்சல் அட்டையில் எழுத்தோவிய முறையில் எழுதுவது குறித்துப் பயிற்சி அளித்தார்.

கழுவேலி ராம்சார் தளத்துக்கு வருகை தரும் பறவைகள் மற்றும் ஈர நிலங்களைப் பாதுகாப்பது குறித்து விழுப்புரம் மாவட்ட வனத்துறை அதிகாரி கார்த்திகேயனி பேசினார். ‘வரலாறும் மரபும் நினைவுச்சின்னங்களும்’ என்கிற தலைப்பில் சோழ மண்டல வரலாற்றுத் தேடல் குழுவின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் எஸ். உதயசங்கர் பேசினார். அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியருக்கு அஞ்சல் துறை ஊழியர்கள் அஞ்சல் தலை குறித்து விளக்கினர்.

சிவகுமார் நினைவுகள்: சிவகுமார், தான் வரைந்த ஓவியங்களைத் திரையில் காட்டியபடி அவற்றின் பின்னணிச் செய்திகளையும் பகிர்ந்துகொண்டது சுவாரஸ்யமாக இருந்தது. சென்னை முதல் கன்னியாகுமரி வரையான பல ஊர்களில் இருக்கும் புகழ்பெற்ற கட்டுமானங்கள் அவரது கைவண்ணத்தில் நீர்வண்ண ஓவியங்களில் மிளிர்ந்தன. ‘நான் சென்னை எழும்பூரில் உள்ள கலைக்கல்லூரியில் ஓவியம் பயின்றேன். ஓவியர்களின் ஊராக அறியப்படும் சோழமண்டலத்தில் உள்ள சேனாபதி மற்றும் இமானுவேல், சந்திரசேகர், ஆர்.கே.தயாள் போன்றோர் என் கல்லூரி நண்பர்கள். இயற்கைக் காட்சிகளையோ கட்டிடங்களையோ நேரில் சென்று வரைவதற்காகப் பல இடங்களுக்குச் செல்வோம். மகாபலிபுரம் வரைக்கும்கூட சைக்கிளிலேயே சென்றிருக்கிறேன்.

கேலரி மூலம் என் ஓவியங்களை விற்பதில் கிடைக்கும் பணத்தில் பயணம் மேற்கொள்வேன். இன்றைய அண்ணா சாலை(மவுண்ட் ரோடு)யில் உள்ள பல கட்டிடங்களை அவற்றின் எதிரிலேயே பார்த்து வரைந்திருக்கிறேன். அதனால் சில முக்கியமான நிகழ்வுகளை நேரடியாகப் பார்க்க முடிந்தது. கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் 1957இல் இறந்தார். அவரது இறுதி ஊர்வலத்தின்போது அண்ணா சாலையே ஸ்தம்பித்தது. காணுமிடமெல்லாம் மனிதத் தலைகளாகவே இருந்தன. அப்போதெல்லாம் நடிகர் ஆவோம் என்கிற எண்ணமே எனக்கு இல்லை. வரையும் திறன் குறித்து மிகுந்த தன்னம்பிக்கை மட்டும் எனக்கு இருந்தது.

ஒரே ஓவியர் மூன்று முகவரிகள்: ‘நவ இந்தியா’ என்கிற பத்திரிகையில் ‘உங்களுக்குப் பிடித்த நடிகர் நடிகையரின் ஓவியங்களை வரைந்து அனுப்புங்கள்; உங்கள் பெயர் முகவரியோடு அவை வெளியிடப்படும்’ என அறிவிப்பு வெளியானது. நான் என் நண்பர்களிடம் ‘கூடிய சீக்கிரம் என் பெயர் நவ இந்தியாவில் வரும்’ என்றேன். நண்பர்கள் நம்பவில்லை. ‘ராஜா ராணி’ என்னும் படத்தில் நடித்த சிவாஜி கணேசனின் தோற்றத்தை வரைந்து அனுப்பினேன். அந்தப் படம், ‘பழனிச்சாமி, காசிக்கவுண்டன்புதூர்’ என்கிற என் சொந்த ஊர் விவரங்களோடு பத்திரிகையில் வெளியானது.

அடுத்ததாக ‘சம்பூர்ண ராமாயணம்’ படத்தில் சீதையாக நடித்த பத்மினியை வரைந்தேன். ஒரே முகவரியிலிருந்து மீண்டும் அனுப்பினால் பிரசுரிக்க மாட்டார்கள் என்பதால் இம்முறை பொள்ளாச்சியில் உள்ள என் மாமா கடை முகவரியை குறிப்பிட்டேன். தண்டபாணி என்கிற எனது இன்னொரு பெயரில் அந்த ஓவியமும் வெளியானது. மூன்றாவதாக இதேபோல டெய்சி ராணி என்கிற இந்தி நடிகையை வரைந்தேன். அந்த ஓவியமும் பத்திரிகையில் பிரசுரமானது. சிவாஜி ஓவியத்தைப் பார்த்து காஞ்சிபுரத்திலிருந்து ஒருவர் என்னைத் தொடர்பு கொண்டார். மூன்று ஓவியங்களையும் நான் தான் வரைந்தேன் என்பதை அறிந்து அவர் ஆச்சர்யப்பட்டார்.

ஓவியம் வாங்க வந்த காமராஜர்: காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலை வரையச் சென்றபோது, அவரது வீட்டில் தங்கினேன். அவர்கள் வளர்த்த மாட்டில் என் கண்ணெதிரில் கறந்து, ஒரு லிட்டர் பாலைக் காய்ச்சி எனக்குக் கொடுத்தனர். அந்த விருந்தோம்பலை மறக்க முடியாது. பசி, ஏமாற்றம் போன்றவற்றையும் அனுபவித்திருக்கிறேன். போன இடத்தில் தொடர்ச்சியாகப் பத்து மணி நேரங்களுக்கு மேல் உட்கார்ந்து வரைந்ததும் உண்டு. இடையே சாப்பிடக்கூட முடியாது.

1962இல் இந்திய-சீனப்போர் ஏற்பட்டபோது, கல்லூரி மாணவர்களான நாங்கள், அரசுக்கு நிதியுதவி செய்யச் சில ஓவியங்களை விற்பனைக்கு வைத்தோம். இது குறித்துக் கேள்விப்பட்டு அன்றைய முதல்வர் காமராஜர் ஓவியக் கல்லூரிக்கே வந்து, அவற்றை விலைக்கு வாங்கி எங்களையெல்லாம் பாராட்டினார்.

இந்திய ஓவியனின் நிலைமை: ஒருமுறை திருவண்ணாமலை ரமண மகரிஷி ஆசிரமத்துக்குச் சென்றபோது, நான் கடைசி வரை ஓவியனாகவே வாழ்ந்து இறுதியில் ஒரு துறவி நிலையில் இங்கு வந்து சேரக்கூடும் என எண்ணினேன். எதிர்பாராவிதமாக நடிகன் ஆனேன். ஒரு திரைப்படம் பலரது கூட்டுழைப்பு. ஆனால் ஓவியம் என்பது எனது உழைப்பில் மட்டுமே உருவாவது. மீண்டும் ஓவியனாகப் பிறக்க வேண்டும் என்பதே என் விருப்பம். ஆனால் ஓவியனாக இந்தியாவில் பிறக்கக்கூடாது. பல ஓவியர்களுக்கு அவர்களது திறமைக்கேற்ற பொருளாதார அங்கீகாரம் வழங்கப்படவில்லை. வெளிநாடுகளில் ஓவியர்கள் வசதிவாய்ப்போடு வாழும் சூழல் உள்ளது’ என சிவகுமார் கூறினார்.

 

நன்றி : இந்து தமிழ் திசை

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.