Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் காலத்தின் மீது தீட்டப்பட்ட வாழ்வுச்சித்திரம் பச்சை வயல் கனவு | கெளரி பரா

காலத்தின் மீது தீட்டப்பட்ட வாழ்வுச்சித்திரம் பச்சை வயல் கனவு | கெளரி பரா

11 minutes read

பிரித்தானியாவில் வசித்து வரும் இலக்கிய ஆர்வலரும் விமர்சகருமான கெளரி பரா அவர்கள் எழுத்தாளர் தாமரைச்செல்வியின் பச்சை வயல் கனவு நாவல் பற்றி எழுதிய விமர்சனம்..

காலத்தின் மீது தீட்டப்பட்ட வாழ்வுச்சித்திரம் பச்சை வயல் கனவு

பச்சைவயல் கனவு நாவல் இலங்கையின் வரலாற்றுக்காலத்தின் மூன்று முக்கியமான கால ஓட்டங்களை காட்சிப்படுத்துகிறது.

அந்தந்த காலகட்டங்களில் நிகழ்ந்த அரசியல் பொருளாதார மாற்றங்களுக்கு முகம் கொடுத்த பல்வேறு கதாபாத்திரங்களின் வாழ்வின் வழித்தடங்கள் மூலம் எழுத்தில் நிகழ்காலத்தில் நடப்பவை போல உயிர்ப்புடன் பதிந்திருக்கிறது.

நாவலின் நுளைவாயிலாக எழுபது ஆண்டுகளுக்கு முன்னரான நரிப்பிட்டிக்குளம் என்ற யாழ்ப்பாண கிராமத்தில் மிக எளிமையாக மனநிறைவான வாழ்க்கை வாழ்ந்த ஆச்சி, அப்பு, வேலாயுதம், சிவம், அன்னம் என்ற ஒரு குடும்பத்தின் அங்கத்தவர்களினுடைய கதையை எழுதிச்செல்கிறது.

தொடர்ந்து வந்த அரசியல் பொருளாதார சமூக மாற்றங்களை உள்வாங்கி அந்தந்த காலத்திற்கேற்ற கதாபாத்திரங்களை செதுக்கி அதன் மூலம் கதையை நகர்த்தி செல்கிறது.

தாமரைச்செல்வி

அதில் 1958, 1977 மற்றும் 1983 ஆம் ஆண்டில் தமிழர் மீது தெற்கில் அவிழ்த்துவிடப்பட்ட வன்முறை அதன் அதிர்வில் கிளர்ந்தெழுந்த தமிழ் இளைஞர்கள் கட்டி எழுப்பிய இயக்கங்களும் அவர்கள் செயற்பாடுகளும் பின்னர் இந்திய அமைதிப்படையால் ஆக்கிரமிக்கபட்ட தமிழ் மக்கள் சந்தித்த அவலம், அடுத்து அதே தமிழ் மக்கள் மீது இலங்கை ஆமியின் ஆக்கிரமிப்பு என்று நீள்கிறது.

இந்தக்கதையின் தொடக்க காலமானது இலங்கை சுதந்திரம் அடைந்த காலம்.

இந்த காலத்தில் ஆங்கிலேயர்கள் என்ற பொது எதிரியை, ஆக்கிரமிப்புக்காரர்களை எதிர்த்து வீழ்த்திய அரசு, தன் நாடு, தன் மக்கள், அவர்கள் சுய முன்னேற்றம் மற்றும் பொருளாதார வளர்ச்சி என்ற ரீதியில், காடாக இருந்த கிளிநொச்சி நிலங்களை விவசாய நிலமாகவும் குடியேற்ற நிலமாகவும் உருவாக்க இன மத பாரபட்சமின்றி உதவியளித்து ஊக்குவித்த காலம் ஒன்றைக் காட்டுகிறது.

இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த காலகட்டத்தில் வாழ்ந்த மனிதர்களின் எளிமையான வாழ்வை, அவர்கள் பண்பை பரிவை இப்படி காட்சிப்படுத்துகிறார்.

“இஞ்ச மூத்தவன் வாறான், வா மோனை…” அப்பு எழுந்து போய் கையில் கொண்டு வந்திருந்த சாக்கு முடிச்சை வாங்கிக்கொள்ள வேலாயுதம் களைப்புடன் திண்ணையில் அமர்ந்தான். “ எப்ப மோனை கிளிநொச்சியில் இருந்து வெளிக்கிட்டனி?

“காலமை வெளிக்கிட்டனானணை வண்டில் ஒண்டும் கிடைக்கேல்லை, மத்தியானம் கரிச்கோச்சியில் வந்து சாவகச்சேரியில் இறங்கி நாலு கட்டை நடந்து வாறன்” இலங்கைக்கு சுதந்திரம் கிடைச்சிருக்காம் எண்டு வழியெல்லாம் சனம் கதைச்சுக்கொண்டிருக்குதுகள்”

“நான் நாளைக்கு கிளிநொச்சி போகப்போறன் அப்பு“

வேலாயுதம் சொல்லிக்கொண்டிருத்தான்

“அப்புவோட தோட்டத்தையும் இருக்கிற பரப்பு வயலையும் பார்த்துக்கொண்டு இங்க இருக்க ஏலாதே மோனை, ஏன் தூர இடம் போய் அலைய வேணும்“ ஆச்சி ஆதங்கத்துடன் கேட்டாள்.

“இங்க உழைக்கிறது சீவியத்திற்கு தான் வருமணை அதுக்கு மேல் ஒரு வசதியும் கிடைக்காது”

சீவியத்திற்கு வந்தால் போதும் தானே மோனை“ அதற்கு மேல வேறென்ன தேவைகள் இருக்கும் என்று ஆச்சிக்கு புரியவில்லை”.

“சாப்பிட்டால் மட்டும் காணுமோனை கிளிநொச்சி தங்கப்பவுண் மாதிரி மண் உள்ள பிரதேசம், இருந்து பாரணை ஒரு காலத்தில் எப்படிவரும் எண்டு, அந்த மண்ணில் பாடுபட்டால் நல்லாய் வந்திடலாம்”

தன்பிள்ளை எப்போது இவ்வளவு ஆசையுள்ளவனாய் மாறினான் என்பது தெரியாமல் ஆச்சி விழித்துக்கொண்டு நின்றாள்.

“சீவியத்திற்கு வந்தால் போதும் தானே மோனை“ அதற்கு மேல வேறென்ன தேவைகள் இருக்கும் என்று ஆச்சிக்கு புரியவில்லை”.

ஆச்சி இதுவரை வாழ்ந்த மற்றும் வாழும் காலமும் சூழலும் போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து என்று போதித்த ஒரு காலம்.

அந்தக்காலம் ஊருக்குள் உலக வியாபாரம் உள் நுழையாத காலம். அவர்கள் உலகமும் அவர்களின் ஊரும் அவர்கள் வாழ்ந்த அண்டை அயலாக மட்டுமே இருந்தது. வசதியான வாழ்க்கைகான கனவுக்களுக்கான கதவுகளை அவர்கள் காலம் திறக்கவில்லை. திரைகடல் ஓடி திரவியம் தேடு என்பதெல்லாம் அவர்களைப் பொறுத்தவரை வெறும் ஏட்டுச்சுரைக்காய் பழமொழியாகவே இருந்திருக்க வேண்டும். லாபம் ஈட்டுதல் என்ற ஒரு சொல்லை ஆச்சி அறிந்திருக்கவில்ல. மனித வாழ்விற்கான அடிப்படைத்தேவைகளுக்கு அப்பால் சிந்திக்காத ஒரு காலத்தின் வாழும் பெண்ணாக ஆச்சி இருக்கிறார்.

அவளின் வாழ்வும் வளமும் உணவு, உடை, உறைவிடம், சுற்றம், சூழல், அந்த சுற்றம் சூழலுடன் உறவாடல் என்ற ஒரு உலகிற்கு வெளியே கற்பனை பண்ணுவதற்கு இடமளிக்கவில்லை.

ஆசைகளுக்கான தேவை என்ன என்பது ஆச்சியின் அன்றைய கேள்வியாக எழுகிறது.

மாறாக ஆச்சியின் மகன்களான வேலாயுதம், சிவம் மற்றும் அவர் மகள் அன்னத்திற்கு வாழ்தல் என்பது ஆச்சியின் வாழ்தல் பற்றிய புரிதலை விட வேறொரு பரிமாணத்திற்கு மாறத்தொடங்கிய காலம். இதில் வேலாயுதம் மற்றும் சிவம் நரிப்பிட்டிக்குளம் என்ற சிறு பனங்கூடல் கிராமத்தை விட்டு பொருளாதார முன்னேற்றம் கருதி தங்கள் வசதியான எதிர்கால வாழ்வை நிர்ணயிக்கும் கனவுக்கன்னியாக கைக்கெட்டிய தூரத்தில் இருந்த கிளிநொச்சி நகரை நோக்கி இடம்பெயர்வதோடு தொடங்குகிறது.

அவர்கள் உழைப்பாலும் அவர்களைப்போன்று இடம்பெயர்ந்தவர்களின் உழைப்பாலும் யானைகள், நுளம்புகள் மற்றும் கொடிய விஷப்பாம்புகள் என்றிருந்த கிளிநொச்சி காட்டு நிலங்கள் விவசாய நிலமாக பரிணாம வளர்ச்சி அடைகிறது. மக்கள் உழைப்பின் பரிமாற்று பெறுமதியை உணரத்தொடங்கி விட்ட காலம் அது.

அண்ணன் வேலாயுதம் தம்பி சிவம் ஆகியோரின் நேரம், உழைப்பு பின்னர் அறுவடை பண்டமாக மாற்றப்பட்டு அவற்றிற்கு பரிமாற்று பெறுமதி கிடைக்கிறது. லாபம் என்ற ஒன்றை ஈட்டிக்கொண்டு சொகுசான ஓர் வாழ்வுக்குள் அவர்கள் நுழைகிறார்கள். அவர்கள் தங்களுக்கான வசதிகளை ஈட்டிய பின் மீதி லாபத்தில் சினிமாத்தியேட்டர், மில் என்று கட்டி மேலும் அந்த காட்டுக்கிராமங்களை நகரமயமாக்குகின்றனர்.

புதிதாக சுதந்திரம் அடைந்த இலங்கை அரசு விவசாயிகளுக்கு நிலம் கொடுத்து ஊக்குவித்தது மட்டுமல்லாமல் அவர்களுக்கு இரணைமடுக்குளத்தில் இருந்து நீர்பாசன வசதியையும் வழங்கியது. அவர்கள் நெல் அறுவடையை விற்று ஈட்டிய லாபம் பட்டுத்துணிகளாகவும் நகை நட்டுகளாகவும் அவர்கள் தங்கை அன்னத்தின் திருமணத்தை யாழ்ப்பாணத்தில் அலங்கரித்தது, முஸ்லிம் வியாபாரிகள் விற்கும் பட்டுத்துணிகளை நகைகளை கொள்வனவு செய்யும் சக்தி சிவம் மற்றும் வேலாயுதற்திற்கு வாய்த்தது, புதிதாக ஒர் வியாபார சந்தை வலைப்பின்னல் பொருளாதார எழுச்சி உருவாகியது அதனால் இன மத பேதம் இன்றி சுய முன்னேற்றம் மற்றும் சமூக முன்னேற்றம் கருதி ஒன்றுபட்டு உழைத்த அனைவர் வாழ்விலும் செல்வம் கொழிக்க தொடங்குகிற காலமாக அந்தக்காலம் உருப்படுகிறது.

அவர்கள் ஏர் சாத்தி நிற்கிற அதே சுவரோரமாக அவர்கள் கார்களும் நிற்கத்தொடங்கியபோது தங்களின் அந்த வளர்ச்சியை பார்த்து அவர்களே பூரித்துப்போனார்கள்.

அதுவரையில் சந்தைகளோடு இருந்த சமூகம் சந்தை சமூகமாக மாறுகிறது.

வீட்டுக்குத்தேவையான பல் வகைப் பயிர்களை பயிரிட்டு பரப்பு நிலத்தில் சொந்த குடும்பத்தின் உணவுத்தேவைக்காக பாவித்து மிகுதியை மழைக்காலத்தேவைக்காக கொஞ்சமாக சேமித்து உண்டு வாழ்ந்த காலம் மாறி வணிக தானியமான நெல் மாறுகிறது. அதிலிருந்து கிடைக்கும் பணத்தில் பெரிய வீடு, கார் என்று ஓர் வசதியான வாழ்க்கை வாழ மனிதர்கள் விளைகிற காலமாக சிவம் மற்றும் வேலாயுத்த்தின் இளமைக்காலம் மாறுகிறது.

பெரும்பகுதி காடும் காடு சார்ந்த முல்லை நிலமாக அதுவரை இருந்து வந்த கிளிநொச்சி நிலம் 1950 களில் வயலும் வயல் சார்ந்த மருத நிலமாகவும் ஒரு குடியேற்ற நிலமாகவும் நகரமாகவும் வளர்ச்சி அடைவதை பச்சை வயல் கனவு நாவல் வாசகர் கண் முன்னே விரிப்பதுடன், ஓர் புது நிலத்தில் ஒரே காலகட்டத்தில் உழைப்பின் நிமித்தமும் சுய முன்னேற்றத்தின் நிமித்தமும் குடியேறிய சிங்களவர்கள், யாழ்ப்பாணத்தமிழர்கள், இந்திய வம்சாவழித் தமிழர், அருவிவெட்டுக்காலங்களில் அங்கு வந்து இருந்து அறுவடையில் உதவி தாங்களும் பயனடைந்த முஸ்லிம் ஆண்கள் என்று பல்வேறு மத இன கலாச்சார பிண்ணணி கொண்டவர்கள் எப்படி ஒற்றுமையாக தங்கள் உழைப்பைக்கொண்டு ஒரு நகரை நிர்மாணிக்கிறார்கள், மற்றும் கூட்டாக அவர்கள் சுக துக்கங்களில் கை குடுப்பதை ஓர் கலாச்சாரமாக வளர்த்தெடுக்கிறார்கள் என்பதை கிளிநொச்சியில் குடியேறிய மக்கள், ஒருவரின் மரண வீட்டு செலவில் கூட்டாக பங்கேற்கும் தன்மையில் இன மத பாரபட்சமில்லாமல் ஒருவருக்காக பலரும் பலருக்காக ஒருவரும் என்ற அவர்கள் வாழ்வின் கலாச்சார விழுமியங்களினூடே காட்டுகிறார்.

மனிதமையவாதக்காலம்

ஒட்டுமொத்த மனித குல வரலாற்றுக்குள் இந்த நாவல் காட்டும் காலத்தை மனித மையவாதக்காலம் ( Antropocene) என்று அழைக்கப்படும் ஓர் காலத்திற்குள் அடக்கலாம்.

இருப்பினும் இன்று நாம் வாழ்ந்து வரும் காலமானது கொஞ்சம் கொஞ்சமாக (Post Antropocene) பின் மனித மையவாதக்காலமாக மாறிக்கொண்டு வருவதை அவதானிக்கலாம். பின் மனிதமையவாதக்காலத்திற்கான தேவையை மனிதர்களுக்கு அறுவுறுத்தியது மனிதர்களால் பெருமளவில் அவர்கள் ஆசைக்கேற்ப அழிக்கப்பட்டு சீற்றம் கொள்ளும் இயற்கை.

இயற்கையவிவசாயத்துடன் தொடங்கிய மனிதர்களின் பொருளாதார வளர்ச்சியானது நாளடைவில் சூழலையும் சக விலங்கினங்களையும் சக மனிதர்களையும் புறம் தள்ளி விட்டு லாபம் ஈட்டும் மனிதர்களை மட்டுமே இன்று வரையில் முன்நிறுத்தி பெருமைப்பட்டுக்கொண்டது.

உற்பத்தியை பெருக்க மரபணு மாற்றம் செய்யப்பட்ட நெல் வகைகளின் வருகை செயற்கை உரம், செயற்கை கிருமி நாசினி என்று வளர்ந்து வந்த விவசாயம் இன்று இன்னொரு பரிணாம வளர்ச்சியான polytunnel ஐ மூலம் விவசாயம் என்று போய் நிற்பது மட்டுமன்றி மண்ணோ மனிதர்களின் தலையீடோ தேவைப்படாமல் உணவை உற்பத்தி செய்யும் அளவிற்கு விவசாயம் என்பது உருமாறி இருப்பதனால் பச்சை வயல் என்பது இனி வரும் சமூகங்களுக்கு ஓர் கனவாக மட்டுமே இருக்கப்போகிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை.

மனித மையவாதக்காலத்திற்கு முன்னர் விலங்குகளை வேட்டையாடுவதோடு காடுகளில் கிடைக்கும் காய் கனி கிழங்குகளை மட்டும் சேகரித்து தங்களை பசி பட்டினியில் இருந்து அரைகுறையாக காத்து வந்த மனிதர்கள் தங்களை முழுமையாக பசி பட்டினியில் இருந்து விடுதலை செய்யவே விவசாயத்தை கையில் எடுத்தனர்.

இந்தப்பூமியில் வாழும் உயிரினங்கள், இயற்கை வளங்கள், காடு, நிலம், கடல், மலை, அருவி என்று அத்தனை விடயங்களையும் மனிதன் தன் சுயநலத்திற்காகவும் தன் முன்னேற்றத்திற்காகவும் தொடர்ந்து வசப்படுத்திக்கொண்டும் ஆட்கொண்டும் கட்டுப்படுத்திக்கொண்டும் வருகிறான்.

சூழலுக்கு ஏற்றாற்போல இயற்கையோடு இசைந்து பயணிக்கும் வகையில் பரிணாம வளர்ச்சி அடைந்து கொண்டு வந்த மனிதன் எப்போது சூழலை தனக்கு ஏற்றாற்போல மாற்றி அமைக்க தொடங்கினானோ அன்றில் இருந்து மனிதமையவாத கொள்கையானது மனிதனின் எல்லா செயற்பாடுகளிலும் அதனது முத்திரையை பதிக்க தொடங்குகிறது.

இன்றைக்கு நாம் இந்த பச்சை வயல் கனவுக்கதையை வாசிப்புக்கு உள்ளாக்கும் காலமானது “பின் மனித மையவாதக்காலம்” என்று குறிப்பிடலாம்.

ஆகவே இந்தக்கதை எழுதப்பட்ட காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் இக்கதையை புரிதலுக்கு உட்படுத்தும் விதமும் இன்றைய சூழலியல் காடழிப்பு பற்றிய அக்கறை/ விழிப்புணர்ச்சி கொண்ட மனிதர்களால் இக்கதை புரிதலுக்குட்படுத்தப்படும் விதமும் வேறுபட்டிருக்கும் என்பது நிச்சயமான உண்மை. ஏனெனில் உலகில் நியாயம் என்பதும் அநியாயம் என்ற புரிதல்கள் அந்தந்த காலத்திற்கேற்ப விஞ்ஞான/ தத்துவ விசாரணைக்குட்படுத்தப்படும் போது மாற்றம் அடைகிறது.

ஆகவே காலத்தால் அழியாத பிரதி அல்லது போதனை நூல் என்ற தகுதி பைபிள் மற்றும் திருக்குறளுக்கு கூட கிடையாது . அதனடிப்படையில் பச்சைவயல் கனவும் இதற்கு விதிவிலக்கு அல்லவென்றே சொல்லலாம்.

அன்றைய இலங்கையில் காடழிப்பும் நிலப்பங்கீடும் இன்றைய இலங்கையில் நில அபகரிப்பும் தாமரைச்செல்வியின் பச்சை வயல் கனவு நாவலை வாசிக்கும் போது என்னைப்போலவே பலருக்கு பாரதியாரின் இக்கவிதைவரிகள் நினைவில்வந்திருக்கக் கூடும்.

“காணி நிலம் வேண்டும் – பராசக்தி

காணி நிலம் வேண்டும் – அங்கு

கேணி யருகினிலே – தென்னைமரம்

கீற்று மிளநீரும்…. பத்துப் பன்னிரண்டு – தென்னைமரம்

பக்கத்திலே வேணும் – நல்ல

முத்துச் சுடர்போலே – நிலாவொளி

முன்புவர வேணும்? அங்கு

கத்துங் குயிலோசை – சற்றே வந்து

காதிற்பட வேணும் – என்றன்

சித்தம் மகிழ்ந்திடவே – நன்றாயிளந்

தென்றல்வர வேணும்

இதையே அவர் “தனியொருவனுக்கு நிலம் இல்லை எனில் இந்த ஜெகத்தினை அழித்திடுவோம்” என்ற ஆவேசத்துடன் புரட்சிப்பாடலாகப்பாடவில்லை?

நிலம் என்பது ஒரு மனிதனின் அடிப்படைத்தேவை அல்ல என்று ஒரு அரசோ அல்லது அவர் வாழ்ந்த சமூகமோ அவருக்கு போதித்து இருக்க வேண்டும் ஆகையால் “காணி நிலம் வேண்டும் என்ற ஆசை தேவைகளுக்கு அப்பாற்பட்ட ஒன்றாக எண்ணி அதை அவர் இஷ்ட தெய்வத்திடம் வரமாக கேட்டு பாடியிருக்கிறார் என்றே எண்ணத் தோன்றுகிறது.

இப்படி சராசரி மனிதர்களுக்கு நிலத்தை தானமாக வழங்கிய அரசு இயங்கிய அதே நாட்டில்த்தான் இன்று அரசின் நில அபகரிப்பை எதிர்த்து தினம் தினம் போராட வேண்டிய ஓர் நிலமைக்கு மக்கள் கூட்டம் தள்ளப்பட்டிருக்கின்றதை ஆச்சரியத்துடன் அவதானிக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

பச்சை வயல் கனவு நாவலின் தமிழ்

“ நரிப்பிட்டிக்குளம் அந்த ஆவணி மாதத்தில் பெருமளவு வற்றிப்போய் கிடந்தது, நடுவே சிறிதளவு தண்ணீரே இருந்தது, வடக்கு கரையில் நாலைந்து புளிய மரங்கள் கிளை பரப்பி நின்றன.

தெற்கு பக்கம் தரவைவெளி பரந்து கிடந்தது. அந்தப்பச்சைவெளியில் மாடுகள் தம்பாட்டுக்கு மேய்ந்து கொண்டிருந்தன.

மேற்குப்பக்கம் கூடல் கூடலாய் பனைமரங்கள் இந்த ஆவணி புரட்டாதியில் பனம்பழங்களின் வாசனை எந்நேரமும் காற்றில் மிதந்து கொண்டிருக்கும்.

கிழக்குபக்கம் அவர்கள் கிராமம் கிராமம் தாண்டி தோட்டங்கள் வயல் வெளிகள்.

சூரியன் மேற்கில் சிவப்பாய் விழுந்து கொண்டிருந்த நேரம்….. தரவை வெளியில் கொக்குகள் மாடுகளுக்கு மேலாக பறந்து கொண்டிருந்த பொழுது குளத்தில் மாடுகளை இறக்கி……..

மேற்குறிப்பிட்ட தாமரைச்செல்வியின் எழுத்தின் பாங்கில் இலங்கை மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் சிறு ஊர்களில் வாழ்ந்த மக்களின் அன்றைய காலத்து பேச்சு வழக்கை அவதானிக்கிறபோது அப்படி இன்றைய தமிழர்கள் தமிழ் பேசுவதில்லை என்பது தெட்டத்தெளிவு.

திசைகள் பற்றிய துல்லியமான நுண்ணுணர்வோடு இருக்கும் மக்களால் மட்டுமே இப்படி மொழியில் வடக்கு, மேற்கு, கிழக்கு, தெற்கு, தென்மேற்கு, என்ற பாங்கில் தாங்கள் நிற்கும் இடத்தை பகுத்தறிய முடியும் என்றும் அவர்கள் மூளையும் கால்களும் எப்போதும் தாம் செல்ல நினைக்கும் இலக்கை இலகுவாக அடையக்கூடியவை என்பதை மொழியியல் ஆய்வாளர்கள் மற்றும் மூளை பற்றிய ஆய்வாளர்களின் கணிப்புமாக இருக்கிறது.

உலகமயமாக்கப்பட்ட இன்றைய நவீன தமிழர்களாகிய நாம் ஒருவருக்கு வழி சொல்லும்போது இந்த மொழிப்பிரயோகத்தை அறவே பாவிப்பது இல்லை என்றே சொல்லாம். வழி காட்டும் போது நாங்கள் ஆங்கிலேயர்கள் போலவே வலது இடது என்ற இரண்டைத்தான் பாவனைக்குட்படுத்துகிறோம். இதேபோன்று கலாச்சார மாற்றங்களினால் அழிந்த பழந்தமிழ் சொற்பிரயோகங்கள் இந்த நாவலில் கொட்டியிருக்கின்றன. அந்த வகையில் பச்சைவயல் கனவு தமிழருக்கு ஓர் சொற்களஞ்சியமாகவும் விளங்குகின்றதை அவதானிக்கலாம்.

பச்சை வயல்க்கனவு நாவல் இலங்கையின் பல காலகட்டங்களின் வழித்தடங்களை பதிவதோடு தமிழ் மொழியின் நுட்பத்தையும் செழிப்பையும் காலப்போக்கில அது எப்படி உரு மாறி இருக்கிறது என்பதைப்பற்றியும் வாசித்துக்கொண்டிருக்கும்போது நம்மை சிந்திக்க வைக்கிறது.

பச்சைவயல் கனவு நாவலை வாசிக்கும் வாசகர்கள் அறுபது வயதை தாண்டிய புலம் பெயர்ந்த தமிழ்களாக இருப்பின் அவர்களில் பலர் இந்த நாவல் பயணிக்கும் காலங்களிலும் நிலங்களிலும் இந்த நாவலில் வரும் சிவம் மற்றும் வேலாயுதம் சகோதர்ர்கள் போல அமோகமாக வாழ்ந்து பின்னர் போரினால் வாழ்ந்து கெட்டவர்களாக தங்களை அடையாளப்படுத்திகொள்வார்களானால் அவர்களுக்கும் இந்த நாவலில்வரும் கதாபாத்திரங்களுக்குள்ளும் நிச்சயம் ஒரு உணர்ச்சி பிணைப்பும் அந்தியோன்யமும் தோன்றும்.

அந்த வகையில் இந்நாவல் அவர்களின் காயமுற்ற நினைவுகளின் வடுக்களில் இதமாக ஒரு களிம்பு தடவும் பணியினை செய்யும். ஒரு வேளை இந்த நாவல் புலம் பெயர் தமிழரின் இரண்டாம் தலைமுறை கையில் கிடைக்குமாயின் அவர்களின் வேர்களை, அவர்கள் தாத்தா பாட்டியின் வாழ்வின் விழுமியங்களை எடுத்தியம்ப வல்லது, ஆகவே இந்த நாவலை எவர் வாசிக்கிறார்களோ அவர்கள் வாழ்வனுபவங்கள், தேடல்கள், வாழ்க்கை பற்றிய புரிதல்களுக்குட்பட்டு இதன் கலைப்பெறுமானம் மற்றும் இலக்கியப் பெறுமானம் பல்வகை பரிமாணங்களை காட்டி நிற்கும் என்பது உறுதி.

.

நிறைவு..

.

.

.

.

.

கெளரி பரா

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More