*
எந்த வேகும் பாலைக்கும்
மணநாள் வருமன்றோ.
கார் முகில் மறைப்பில் மழை புணர
பாலை மணல் கூட உண்டாகி
பசும் வசந்தம் பிறக்குமன்றோ.
*
லீலி மலர்களின் தேன் விருந்துக்கு
மகரந்த மொய்யோடு வருகின்ற
வண்டுகளும் வண்ணத்து பூச்சிகளும்
சுவர்க்கம் திறந்துவர
வையத்தை காக்கும்
மாதவம் நிகழுமன்றோ
*
எனைச் சூழும் லீலி மலர் சோலைகளை
விரல்களால் தடவி சுண்டி
வீணையாய் மீட்டுகிற காற்றின்
அதிகாலை இராகங்களில் மயங்குகிறேன்.
வாசனை கதலின் மொழியா அல்ல
காமத்தின் சமிக்ஞையா என
வண்டுகளும் பெண்டுகளும் மட்டுமே அறிவர்.
*
பாலை வசந்தம் நிலைகாது என்று
மூடர்கள் அழுகிறார்கள்.
மண்ணில் எது நிலைக்கும்?
விண்ணில் எது சுவர்க்கம்?
*
ஆதலினால் தோழ தோழியரே
நீரூடே நெருப்பை மறைத்து
கடத்திச் செல்லுகிற லாவகத்தோடு
காதலராய் காவலராய் கானா பாடலாம்.
*
வாழ்வை
வண்ணத்துப் பூச்சிகளிடம் மட்டுமல்ல
புலிகளிடம் இருந்தும்
கற்றுக்கொண்ட கவிஞன் நான்.
நிலையானது நம் காதலும் வீரமுமே.
அதுவே காலங்களை வென்று
நம் சந்திகளின் பாடு பொருளாய்
காவியங்களாய் நிலைக்கும்.
*
காதலில் நெகிழ்ந்தும்
கொடுமை கண்டு வெகுண்டும்
மாநுடமாய் வாழ்கின்றேன்.
-23.10.20