இந்திய பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கவுள்ள பதவிஏற்பு விழாவில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அனுமதிக்கக்கூடாது என்று வலியுறுத்தி எதிர்வரும் 25 ஆம் திகதி எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்படவுள்ளது. மே 17 இயக்கமே இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதுடன் சென்னை வள்ளுவர் கோட்டத்திலே இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.
நரேந்திர மோடி பதவி ஏற்பு விழாவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட சார்க் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. தமிழக சட்டசபையில் ராஜபக்ஷவை போர்க்குற்றவாளி என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கின்ற நிலையில் அவரை பதவி ஏற்பு விழாவுக்கு அழைப்பது ஏன்? என்றும் தமிழர் அமைப்புகள் கேள்விகள் எழுப்பியுள்ளன.
ராஜபக்ஷவினை அழைக்காதே இந்தியாவிற்குள் நுழைய அனுமதிக்காதே’ எனும் முழக்கத்துடன் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளது. மேலும் ‘இந்திய அரசுக்கு நம் எதிர்ப்பினை பதிவு செய்ய அழைக்கிறோம். அனைவரும் திரளுவோம்’ என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.