பாரதப் பிரதமராகப் பொறுப்பேற்கும் நரேந்திர மோடியின் பதவியேற்பில் இலங்கை அதிபர் கலந்து கொள்ள தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. எனவே, இந்த எதிர்ப்பைச் சமாளிக்கும் வகையில் தம்முடன் இலங்கை வட மாகாண முதல்வர் விக்கினேஸ்வரனையும் இந்தியாவுக்கு அழைத்து வர இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்ச திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
புது தில்லியில் வரும் மே 26ம் தேதி நரேந்திர மோடி பிரதமராகப் பொறுப்பேற்கும் விழாவில் சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. இந்த அழைப்புக்காகக் காத்திருந்தவர் போல், இலங்கை அதிபர் ராஜபட்ச தாம் இதில் கலந்து கொள்வதாக அறிவித்துள்ளார். ஆனால் அவரது வருகைக்கு தமிழகத்தில் அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்பு எழுந்து வருகிறது.
இதனால், தமிழகத்தில் எழுந்துள்ள எதிர்ப்பை சமாளிக்கும் வகையில் இலங்கை வட மாகாண முதல்வரான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் விக்னேஸ்வரனை தம்முடன் அழைத்து வர ராஜபட்ச திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. தன்னுடைய அழைப்பையும் அவர் விக்னேஸ்வரனுக்கு விடுத்துள்ளார். ஆனால், விக்கினேஸ்வரன் தரப்பிலிருந்து எந்த உறுதியான பதிலும் இதுவரை வழங்கப் படவில்லை என்று தெரிகிறது.