டெல்லியில் நாளை நடைபெற உள்ள நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவையொட்டி உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.குடியரசுத் தலைவர் மாளிகைக்கு மேலே விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் நரேந்திர மோடியின் தலைமையிலான பா.ஜனதா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதனையடுத்து பாராளுமன்ற பா.ஜனதா கட்சியின் தலைவராக(பிரதமர்) மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார்.மோடி பிரதமராக பதவி ஏற்கும் விழா நாளை (திங்கட்கிழமை) டெல்லி ஜனாதிபதி மாளிகையில் மாலை 6 மணிக்கு நடக்கிறது.
மோடி பதவியேற்பு விழாவுக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், இலங்கை அதிபர் ராஜபக்சே உள்ளிட்ட சார்க் நாடுகளின் தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.
இதனையொட்டி குடியரசுத்தலைவர் மாளிகையின் திறந்தவெளி முற்றத்தில் 2500 பேர் அமர்ந்து பதவியேற்பு நிகழ்வை காணும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.ஒரே நேரத்தில் முக்கிய பிரமுகர்கள் கூட இருப்பதால் தலைநகர் டெல்லி பலத்த பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. 25,000 போலீஸார், துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.