தனக்கு வாக்களித்து பதவியில் அமர்த்திய வடமாகாணத்தில் வாழும் மக்களின் நலன் கருதி வடமாகாணசபைக்கு வழங்கப்பட்ட எந்த ஒரு சட்டப்படியான வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை என்ற காரணத்தை எடுத்து கூறி, ஜனாதிபதியுடன் புதுடில்லி சென்று வருவதற்கு, ஜனாதிபதி விடுத்த அழைப்பை ஏற்க வடக்கு முதல்வர் விக்கினேஸ்வரன் மறுத்துவிட்டார். அதேவேளையில் அமைச்சர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று அவரது குழுவில் ஒருவராக புதுடில்லி சென்று, பிரதமர் மோடியின் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொண்டுள்ளார்.
இந்நிலையில் ஜனாதிபதி கடந்த மத்திய மாகாணசபை தேர்தல் வேளையிலும், அதற்கு முன்னர் ஜனாதிபதி தேர்தல் வேளையில் தனது மகிந்த சிந்தனை வேலை திட்டத்திலும், வழங்கியிருந்த மலைநாட்டு தொழிலாளருக்கு காணி, வீடு என்ற மகத்தான வாக்குறுதியை புதுடில்லி வரை போய் வந்த ஆறுமுகன் தொண்டமான் நிறைவேற்றி காட்ட வேண்டும். வரவு செலவு திட்டத்தில் அறிவிக்கப்பட்டு, இன்று அதற்காக ஒரு சதமேனும் நிதி ஒதுக்கீடு செய்யப்படாமல், மிக நீண்ட காலமாக வெறும் வாய்ப்பேச்சாக மாத்திரம் இருந்துவரும் மலையக தோட்ட தொழிலாளருக்கான வீடமைப்பு திட்டம், இனிமேலும் தாமதிக்கப்படாமல் நிறைவேற்றப்படவேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.