சிவில் அதிகாரிகள் மற்றும் பொதுமக்களோடு நெருங்கிய தொடர்பு நிலையில் உள்ள கிராம அலுவலர்கள், சமுர்த்தி அலுவலர்கள் மூலம் அரசு இராணுவத்துக்கு ஆள்களை சேர்த்துக் கொள்கின்றது. இந்த விடயத்தில் சம்பந்தப்பட்ட அலுவலர்களும் தமது கடமைகளை புறம்தள்ளிவிட்டு இராணுவத்துக்கு ஆள்சேர்க்கும் முயற்சியில் ஆர்வத்தோடு ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு காட்டமாகத் தெரிவித்தார் வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன்.
அச்சுவேலியில் காணி சுவீகரிப்புக்கு எதிரான அறவழிப் போராட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் ஐங்கரநேசன் கோபம் மேலிட்ட நிலையில் பொலிஸ், கிராம அலுவலர், சமுர்த்தி அலுவலர்கள் மற்றும் பொது மக்கள் முன்னிலையில் இராணுவத்துக்கு ஆள்சேர்க்கும் நடைமுறையை முன்னிலைப்படுத்தி கூறி விசனம் தெரிவித்தார்.
காணி சுவீகரிப்புக்கு எதிரான போராட்டம் கடந்த திங்கட்கிழமை அச்சுவேலி யூனியன் இராணுவ முகாமுக்கு அருகில் நடைபெற்றது. போராட்டம் நடைபெற்ற இடத்துக்கு நேரில் வருகை தந்திருந்த அச்சுவேலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் பொலிஸாரோடும் நிலஅளவை அதிகாரிகளோடும் ஆக்ரோமான கருத்துப் பரிமாறல் இடம்பெற்றது.