மலேசியாவில் இருந்து புறப்பட்டு மாயமான விமானம், நடுவானில் தீப்பிடித்து எரிந்து இந்தியப் பெருங்கடலில் விழுந்திருக்கலாம் என பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
மலேசிய விமானத்தைத் தேடும் பணிகள் பல கட்டங்களாக நடைபெற்று வந்த போதிலும், அதைப் பற்றிய எந்த தகவலும் இதுவரை கிடைக்கவில்லை.
இந்த நிலையில், ஆஸ்திரேலியாவிலிருந்து, 4,500 கி.மீ., தொலைவில், இந்திய பெருங்கடலின் தென் பகுதியில், விமானம் ஒன்று கடலில் வீழ்ந்தது போன்ற சத்தம், கடலுக்கடியில் நிறுத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கருவி ஒன்றில் பதிவாகி இருப்பதாக, ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
அதே சமயம், கேரளாவில் இருந்து தாய்லாந்திற்கு கடலில், சொகுசு படகில் பயணித்த, பிரிட்டனை சேர்ந்த கேதரின் என்ற பெண், ”ஆரஞ்சு நிறத்தில் தீப்பிடித்த நிலையில், விமானம் ஒன்று கடலில் விழுந்ததை பார்த்தேன். அது விமானமாக இருக்கும் என முதலில் நினைக்கவில்லை. இப்போது அது, மாயமான மலேசிய விமானமாகத் தான் இருக்கும் என கருதுகிறேன்,” என தெரிவித்து, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
என்ற போதிலும் இந்த தகவல்கள் எதுவும் உறுதி செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.