ஐக்கிய நாடுகளின் பொதுசபை நேற்று ஜோர்டானின் இளவரசர் செய்த் அல் ஹுசைனை அடுத்த மனித உரிமைத் தலைவராக நியமனம் செய்தது. இந்தப் பதவிக்கு நியமிக்கப்படும் முதல் முஸ்லிம் மற்றும் அரபு நாட்டவர் என்ற பெருமையை இதன்மூலம் இவர் பெறுகின்றார்.
ஐ.நா.வின் பாதுகாப்பு சபையில் ஜோர்டான் தூதுவராகச் செயல்பட்டுவரும் இவர் வரும் செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி முதல் தென்னாப்பிரிக்காவின் நவி பிள்ளையிடமிருந்து இந்த பொறுப்பைப் பெறுகின்றார். இதுமட்டுமின்றி அமெரிக்கா, மெக்சிகோ நாடுகளுக்கும் இவர் ஜோர்டான் தூதுவராகச் செயல்பட்டு வருகின்றார்.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பிஹெச்டி பட்டம் பெற்றுள்ள இவரை கடந்த வாரம் ஐ.நா.வின் பொது செயலர் பான்-கி-மூன் நான்கு ஆண்டுகளுக்கான இந்தப் பொறுப்பிற்குத் தேர்ந்தெடுத்துள்ளார்.