சர்வதேச தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியம் கடந்த சனிக்கிழமை லண்டன் Harrow Leisure Centre ல் ஏற்பாடு செய்திருந்த ஒன்றுகூடல் நிகழ்வு மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.
மாலை 7 மணிக்கு ஆரம்பமாகி இரவு 12 மணி வரை நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழ் ஊடகவியலாளர்கள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், சமூக ஆர்வலர்கள், புலம் பெயர் அமைப்புக்களின் பிரதிநிதிகள், புத்திஜீவிகள் மற்றும் தமிழ் உணர்வாளர்கள் என்று 200 ற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அவுஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழக ஊடகவியல்துறை பேராசிரியரும் அப்பல்கலைக்கழகத்தின் சமாதான மற்றும் முரண்பாடுகளுக்கான கற்கைகளுக்கான நிலையத்தின் பணிப்பாளருமான ஜேக் லின்ச், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை பேராசிரியரும் சட்ட நிபுணருமான பேராசிரியரான சொர்ணராஜா, லண்டன் பல்கலைக்கழகத்தின் சர்வதேச மற்றும் ராஜதந்திர கற்கைகளுக்கான நிலையத்தின் விரிவுரையாளர் கலாநிதி சுதா நடராஜா, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை விரிவுரையாளரும் லண்டன் பல்கலைக்கழக கல்லூரியில் கலாநிதி படிப்பை மேற்கொண்டு வருபவருமான திரு. குமாரவடிவேல் குருபரன், தமிழ்நாடு லோயலா கல்லூரி விரிவுரையாளர் கலாநிதி கிளாட்ஸ்டோன் சேவியர், கிழக்கு லண்டன் பல்கலைக் கழகத்தில் சமூகவியல் துறையில் கலாநிதி படிப்பை மேற்கொண்டு வரும் தங்கேஸ் பரம்சோதி மற்றும் தமிழ் கார்டியன் ஆசிரியர் பீடத்தை சேர்ந்த சுகுமாரன் சுதர்ஷன் ஆகியோர் இந்த நிகழ்வில் பல்வேறு விடயங்கள் தொடர்பில் உரையாற்றினர்.
எதிர்வரும் புரட்டாதி மாதத்தில் சர்வதேச தமிழ் ஊடகவியலளர்கள் ஒன்றியம் பிரம்மான்டமான அளவில் லண்டனில் நடாத்தவிருக்கும் ஊடகவியல் மகாநாடு தொடர்பிலும் இந்த நிகழ்வில் அறிவிப்பு செய்யப்பட்டதுடன், இந்த மகாநாட்டுக்கு அனுசரணை வழங்குவதற்கு முன்வருமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
லண்டனைச் சேர்ந்த G.J Arts என்ற இளைஞர் இசைக்குழுவினர் மிகச்சிறந்த முறையில் இசை வழங்கி இருந்தனர்.