புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாபட்டினம் பகுதியை சேர்ந்த 1000–க்கும் மேற்பட்ட மீனவர்கள் 257 விசைப்படகுகளில் அனுமதி பெற்ற புதன் காலை கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதில் கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த பழனிவேல், யூனிஸ்கான், புஷ்பராஜ், சக்தி, சத்தியன் உள்பட 6 பேருக்கு சொந்தமான படகுகளில் சென்ற 24 மீனவர்கள்புதன் மாலை இந்திய கடல் எல்லையான கோடியக்கரை அருகே வலைகளை விரித்து மீன் பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் 6 படகுகளுடன் 24 மீனவர்களையும் சிறைபிடித்தனர். அவர்கள் பிடித்து வைத்திருந்த விலை உயர்ந்த மீன்களையும் பறித்துக் கொண்டதுடன் அவர்களை இலங்கையில் உள்ள நெடுந்தீவு முகாமிற்கு அழைத்து சென்றனர்.
பின்னர் ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் அனைவரையும் வரும் ஜூலை 2-ந் தேதி வரை நீதிமன்ற காவலின் கீழ் யாழ்ப்பாணத்தில் உள்ள சிறையிலடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில் கைதான 24 மீனவர்களையும் இந்திய தூதரக அதிகாரிகள் யாழ்ப்பாணத்தில் சந்தித்து பேசியுள்ளனர். அவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளரான சையது அக்பருதீன் சற்று முன் தெரிவித்துள்ளார்.