பாகிஸ்தானில் வடக்கு வர்சிஸ்தான் பகுதியில் ஏராளமான தலிபான் மற்றும் அல்கொய்தா தீவிரவாதிகள் பதுங்கியுள்ளனர். அவர்கள் பாகிஸ்தானில் பல்வேறு பகுதிகளில் அடிக்கடி வெடிகுண்டு தாக்குதல்களை நடத்தி வருகிறார்கள்.
எனவே அவர்களை ஒடுக்குவதற்காக வடக்கு வர்சிஸ்தான் பகுதியில் ராணுவம் முழு வீச்சில் தாக்குதலை நடத்தி வருகிறது. விமானங்கள் மூலம் குண்டு வீசுவதுடன் நேரடி தாக்குதலிலும் ஈடுபட்டு உள்ளது.
இதனால் அந்த பகுதியில் உள்ள மக்கள் கூட்டம், கூட்டமாக வெளியேறி வருகிறார்கள். கடந்த ஒரு வாரத்தில் 4 லட்சத்து 80 ஆயிரம் பேர் அங்கிருந்து வெளியேறி இருக்கிறார்கள்.
அவர்கள் ஹைபர் மற்றும் பர்துன் ஹவா பகுதியில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். அவர்களுக்கு போதிய உணவு மற்றும் தண்ணீர் கிடைக்கவில்லை. தங்கும் இடமும் இல்லாமல் தவிக்கிறார்கள்.
ராணுவ தாக்குதல் நீடித்தால் இன்னும் பல லட்சம் பேர் அங்கிருந்து வெளியேறுவார்கள் என்று பொதுமக்கள் கூறியுள்ளனர்.