பிரிட்டன் நாட்டில் வேலை செய்வதற்காக வந்த 100 பெண்களை விபசாரத்தில் தள்ளிய இந்தியருக்கு 31 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனில் உள்ள பான் பெனின்சுலா சதுக்கத்தில் வசிக்கும் 35 வயதான விஷால் சவுத்ரியின் இந்த தரக்குறைவான நடவடிக்கையை கண்டித்த நீதிபதிகள், 31 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டனர். அவனது தலைமையின் கீழ் செயல்படும் அவனது சகோதரர் குணால் சவுத்ரி உள்பட 5 பேருக்கும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 70 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இவர்கள் அனைவரும் வேலை செய்ய வந்த பெண்களை விபசாரத்தில் தள்ளியதுடன் அவர்கள் பாலியல் அடிமைகளாகவும் மாற்றியுள்ளனர்.
போலீசாரால் கைது செய்யப்பட்ட அவர்கள் மீது நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் விஷால், அவரது சகோதரர் குணால், அவரது குழுவிலுள்ள ராகுல் சிங் மற்றும் அரேஷ்கான் ஆகியோர் ஹங்கேரி, செக் குடியரசு மற்றும் போலாந்து நாட்டை சேர்ந்த 18 வயதே நிரம்பிய பெண்களை ஆன்-லைன் வேலை என்ற விளம்பரத்தின் மூலம் ஏமாற்றி வரவழைத்து விபசாரத்தில் தள்ளியது அரசு தரப்பால் ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டது. இதனை தொடர்ந்தே நீதிபதிகள் இந்த கயவர்களுக்கு கடுமையான தண்டனை விதித்து உத்தரவிட்டனர்.