கடந்த ஆட்சியாளர்களுக்கு மீண்டும் வாக்களித்தால் காட்டு யுகத்திற்கே மக்கள் செல்ல வேண்டியேற்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
வவுனியாவுக்கு இன்று (புதன்கிழமை) விஜயம் செய்த அவர், வவுனியா வைத்தியசாலையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார்.
பிரதமர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “கடந்த அரசாங்கம் தார் வீதிகளையும் காப்பெற் வீதிகளையும் அமைத்திருந்ததே தவிர மக்களுடைய பொருளாதார ரீதியான அபிவிருத்திகளை ஏற்படுத்தவில்லை.
நாம் வடக்குப் பகுதி மக்களினுடையதும் நாட்டு மக்களினுடையதுமான பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்தும் திட்டங்களையே முன்னெடுத்திருக்கிறோம்.
வவுனியாவைப் பொறுத்த வரை பொருளாதார மத்திய நிலையம், செட்டிக் குளத்தில் நீர் விநியோகத் திட்டம், வீட்டுத் திட்டங்கள், சுகாதார வசதி மேம்படுத்தல், வீதி அபிவிருத்தித் திட்டங்கள் என்பன இந்த அரசாங்கத்தின் ஊடாகவே மேற்கொள்ளப்பட்டிருந்தன.
நாம் எதிர்வரும் காலங்களில் வன்னிப் பிரதேசத்து இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பினை உருவாக்குகின்ற வேலைத் திட்டத்தினை முன்னெடுக்க வேண்டியுள்ளது.
இந்த வேலைத் திட்டமானது தொழிற்சாலைகளை மாத்திரம் அமைத்து வேலைகளை வழங்குவதாக இருத்தல் கூடாது. தென்பகுதி மக்களுடைய நெல் மற்றும் பல்வேறு உணவுப் பொருட்கள் வடக்கில் இருந்தே வருகின்றன. ஆகவே இந்த உற்பத்தியை நவீன தொழில்நுட்பத்தின் ஊடாக எவ்வாறு உயர்த்த முடியும் என்பது தொடர்பாக சிந்தித்து திட்டங்களை உருவாக்க வேண்டும்.
அதனூடாக வன்னி இளைஞர்களுக்கு அதிகளவான வேலை வாய்ப்பை உருவாக்கிக் கொடுக்க முடியும். அதனையே நாம் முன்னெடுக்கவுள்ளோம்.
ஆகவே இவ்வாறான திட்டங்களை முன்னெடுப்பதற்கு மக்கள் சரியான தீர்மானங்களை எடுக்க வேண்டும். மீண்டும் எமக்கான சந்தர்ப்பங்கள் கிடைக்கின்ற போதே இவற்றைச் செயற்படுத்த முடியும்.
இதேவேளை, நெதர்லாந்து அரசாங்கத்திடம் இருந்து நிதியைப் பெறுவதற்கு முனைப்புடன் செயற்பட்ட முன்னாள் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கத்திற்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.